Jai bhim: சூர்யா உன்ன நிம்மதியா விட மாட்டேன்..? அதிரடியாக கிளம்பிய செங்கேணி மகன்.

By Ezhilarasan BabuFirst Published Dec 1, 2021, 10:44 AM IST
Highlights

அவரைப்பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் சென்று புகார் தெரிவிப்பேன், நடிகர் சரத்குமார், அர்ஜுன், விஜயகாந்த் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று நான் புகார் தெரிவிப்பேன். ஏன் உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு கூட செல்ல தயாராக இருக்கிறேன். எனக்காக வழக்கு நடத்தியது எங்களுக்கு இறுதிவரை போராடியது கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்தன் தான்

தங்கள் குடும்பத்தை வைத்து படம் எழுத்து கோடி கோடியாக சூர்யா பணம் சம்பாதித்துக் கொண்ட நடிகர் சூர்யா, தன் தாய்க்கு கொடுத்தது போல தனக்கும் பணம் கொடுத்து உதவ வேண்டுமென பார்வதியின் மகன் வலியுறுத்தியுள்ளார். இல்லாவிட்டால் அவர் மீது வழக்கு தொடுக்கவும் தயாராக இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சூர்யாவுக்கு புது நெருக்கடியை ஏன்படுத்தியுள்ளது. 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இது ஒரு புறமிருக்க பாதிக்கப்பட்ட பார்வதியிடம் அனுமதி பெறாமல் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினர் இப்படத்தை எடுத்துவிட்டனர். ஆனால் இதுவரை பார்வதிக்கு எந்த உதவியும் சூர்யா செய்யவில்லை என்று சர்ச்சை கிளப்பினர். இதனையடுத்து சூர்யா பாதிக்கப்பட்ட பார்வதியம்மாவை சந்தித்து  15 லட்சம் நிதி உதவி வழங்கினார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் உடன் இருந்தனர். இந்நிலையில் பார்வதியின் மகன் நடிகர் சூர்யா தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்றும் இல்லை என்றால் அவர் மீது வழங்கு தொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது. 

என் குடும்ப  கதைதான் ஜெய்பீம் திரைப்படமாக வந்துள்ளது. எனது குடும்பம் மிகுந்த நலிவுற்ற நிலையில் இருக்கிறது.  நான்கு பெண் குழந்தைகளை வைத்திருக்கிறேன் கடந்த 10 தினங்களுக்கு முன்புதான் என் மனைவியை இறந்தார். கடுமையான மன உளைச்சலும் கடுமையான நெருக்கடியில் இருந்து வருகிறேன். நடிகர் சூர்யா எங்களது குடும்பத்தின் நிலையை அறிந்து, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் இல்லையென்றால் அவர் மீது நான் வழக்கு தொடுக்கவும் தயாராக இருக்கிறேன். அவரை அவ்வளவு எளிதாக நான் விடமாட்டேன், நிச்சயம் பிரச்சினைமேல் பிரச்சனை செய்வேன், அவரைப்பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் சென்று புகார் தெரிவிப்பேன், நடிகர் சரத்குமார், அர்ஜுன், விஜயகாந்த் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று நான் புகார் தெரிவிப்பேன். ஏன் உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு கூட செல்ல தயாராக இருக்கிறேன். எனக்காக வழக்கு நடத்தியது எங்களுக்கு இறுதிவரை போராடியது கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்தன் தான்.

எங்களுக்காக வழக்கு நடத்தியது கதிர்வேலு, ராஜேந்திரன், சந்தனம், சுந்தரம், ராஜ்மோகன் ஆகியோர் தான் எங்களுக்கு போலீசிடமிருந்து பாதுகாப்பு கொடுத்தார்கள். அவர்கள் எல்லாம் வன்னியர்கள்தான், படையாட்சிகள், இதுவரை நீதிபதி சந்துரு எனக்கு ஒன்றுமே செய்ததில்லை.15 வயது இருக்கும் போதே என்னை போலீஸ்காரர்கள் அடித்து துன்புறுத்தினார்கள், அந்தோணிசாமி, வீராசாமி ஆகியோர் என் கைவிரல்களை அடித்து உடைத்தனர். என்னை கடுமையாக சித்திரவதை செய்தனர். அவர்கள் கண்ணத்தில் அறைந்ததில் என் அண்ணனுக்கு காது கேட்கவில்லை, இப்போது நாங்கள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் இருக்கிறோம். இதுவரையில் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை, ரேஷன் அட்டை இல்லை, சாதி சான்று இல்லை, அதனால் எனது மகன்களையும் படிக்கவைக்க முடியவில்லை, அவர்கள் செம்மரி ஆடு மேய்க்கிறார்கள். ஸ்டவ் ரிப்பேர் செய்யும் வேலை செய்து வருகிறேன், சொந்தமாக வீடு இல்லை, மாதம் ஆயிரம் ரூபாய் தரை வாடகைக்கு கொடுத்து வாழ்ந்து வருகிறேன். எங்கள் குடும்ப நிலை அறிந்து சூரிய எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்துக்கு செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என அவர் எச்சரித்துள்ளார். 
 

click me!