மீண்டும் அரசியல் பிரவேசத்துக்கு வருவது குறித்து காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
மீண்டும் அரசியல் பிரவேசத்துக்கு வருவது குறித்து காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
இந்து வாரிசுச் சட்டத்திற்குக் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபாவும் தீபக்கும்தான், அவரின் நேரடி வாரிசுகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தீபா, “உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டமானது செல்லுமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், அது குறித்து ஆளுநரிடம் விரைவில் முறையிடுவேன்.
தமிழக அரசு ஜெயலலிதாவுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் எங்களிடத்தில் கொடுப்பதுதான் முறையானது. கோடநாட்டில் உள்ள 1000 ஏக்கர் எஸ்டேட், ஐதராபாத்தில் இருக்கும் திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் எங்களிடத்தில் கொடுக்கப்பட வேண்டும். அனைத்து சொத்துகளும் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும். அதில் வெளி நபர் யாருக்கும் பங்கிருக்கக் கூடாது.
அவர் முதல்வராக இருந்தபோது கூட, போயஸ் தோட்ட இல்லத்திற்கு எங்களை அடிக்கடி அழைப்பார். தீபாவளி, பொங்கல் சமயத்தில் அவருடன் நாங்கள் இருந்துள்ளோம். ஒரு குடும்பமாக நாங்கள் நேரம் செலவிட்டுள்ளோம். இவையெல்லாம் பொதுப் பார்வைக்குத் தெரியாது. எங்களை அவர் பொதுப் பார்வைக்கு அழைத்து வர விரும்பவில்லை. எங்களின் நலனில் அவர் அக்கறை கொண்டிருந்தார். எங்களுக்காக அவர் அஞ்சினார். மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்” என அவர் தெரிவித்தார்.