பிரபல நிதி நிறுவனமான கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து இடங்களிலும் கோகுலம் சிட் பண்ட்ஸ் மற்றும் நிதி நிறுவனம் உள்ளது .
பல வருடங்களாக பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் வருமான வரி எய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 8௦க்கும் மேற்பட்ட இடங்களில், சோதனை நடைபெற்றது. சென்னை டி.நகர்,கோடம்பாக்கம், புதுச்சேரி,கோயம்பத்தூர், பெங்களூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தனி தனியாக குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வரை 100 கோடிக்கு மேல், வருமானவரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருவதாகவும், சோதனை முடிவில் தான் வரி ஏய்ப்பு தொகை எவ்வளவு என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்கள் வருமானவரிச் சோதனையால் கலக்கம் அடைந்துள்ளனர்.
சமூக சேவை மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் "அமிர்தானந்தமயி" சென்னை வளசரவாக்கத்திற்கு வருகை தந்த போது, சசிகலாவை அறிமுகம் செய்து வைத்தவர் கோகுலம் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வாரம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இதனை தொடர்து கோகுலம் நிதி நிறுவனர் கோபாலன் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது தினகரன் தரப்பை கதிகலங்க செய்துள்ளது.