தென்காசி மாவட்டத்திற்கு இப்படி ஒரு திட்டமா.!! 119 கோடியில் பிளான், அதிரடி காட்டிய முதலமைச்சர் எடப்பாடியார்.!!

By Ezhilarasan BabuFirst Published Dec 11, 2020, 2:06 PM IST
Highlights

அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநிலத்தின் 33-ஆவது மாவட்டமாக தென்காசி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 22.11.2019 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (11.12.2020) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தென்காசி மாவட்டம், தென்காசி நகரில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் முழு விவரம்: 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 18.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது பெரிய மாவட்டமாக உள்ள திருநெல்வேலி மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்கள். 

அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநிலத்தின் 33-ஆவது மாவட்டமாக தென்காசி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்22.11.2019 அன்று துவக்கி வைக்கப்பட்டது.  புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு, தென்காசி நகரில் 28,995 சதுர மீட்டர் பரப்பளவில், 119 கோடி ரூபாய் மதிப் பீட்டில், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகபெருந்திட்ட வளாகத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள். இப்புதிய வளாகத்தில், மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், சிறுசேமிப்பு அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், எல்காட் அலுவலகம், கூட்ட அரங்கு, நில அளவை உதவி இயக்குநர் அலுவலகம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,  

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவலகம், பதிவுத்துறை  அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம், சுகாதாரத் துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை போன்ற துறைகளின் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!