தமிழக சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் வார்த்தைக்கு இடமில்லையா..? கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்.!

By Asianet TamilFirst Published Jun 26, 2021, 9:56 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு இடமில்லையா என்று கோவை தெற்கு எம்.எல்.ஏ.வும் பாஜக மகளிரணி தேசிய தலைவியுமான வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தமிழக சட்டப்பேரவையில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான ஈஸ்வரன் பேசுகையில், “ஆளுநர் உரையைப் படித்தவுடன் தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், சென்ற ஆளுநர் உரையைப் பார்த்தேன். கடைசியில் நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த் என்று போட்டிருந்தது. ஆனால், இந்த உரையில் ஜெய்ஹிந்த் என்ற அந்த வார்த்தை இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன்” என்று பேசியிருந்தார். ஈஸ்வரனின் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 
இந்நிலையில் இதைப் பற்றி பேசியபோது அவையில் இருந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜெய்ஹிந்த் வார்த்தையை எடுத்ததை பாராட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் பேசினார். ஈஸ்வரன் பேசியதை நாங்க எல்லாரும் பார்த்துகொண்டிருந்தோம். தமிழக சட்டப்பேரவை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிராகச் செயல்படும் என்றால், சுதந்திரபோராட்டத் தியாகிகளுக்கு இப்பேரவை என்ன பதில் சொல்லப் போகிறது. 
எங்கள் தலைவர் நயினார் நகேந்திரன் பேசும்போதும் நிறைய குறுக்கீடுகள் வந்தன. எங்கள் கருத்துகளை சொல்ல சட்டப்பேரவையில் இடம் வேண்டும். சட்டமன்றத்துக்கு நான் புதிது. அதனால், உடனடியாக இதைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றவில்லை. கட்சி தலைவர்களிடம் இதுபற்றி பேசிய பின்னர் இப்பொது எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “சட்டப்பேரவைக் கூட்டத்தில் நாங்கள் மிகவும் எதிர்பாரத்தது டாஸ்மாக் கடை குறைப்பு பற்றிதான். ஆனால், அதுபற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்தும் ஆளுநர் உரையில் எதுவும் இல்லை. இதுபற்றி எஸ்.பி.வேலுமணி கேட்ட பிறகும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த வாக்குறுதியும் கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
நாங்கள் பொறுப்பான அரசாகவே இந்த அரசை பார்க்கிறோம். பல்வேறு திட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற வேண்டிய காலம். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கிறது. வேறு சித்தாந்த பின்னணியிலிருந்து வந்தாலும் மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும்.  மத்திய அரசுக்கு எதிரானவர்கள், மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாதவர்கள், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் போன்றவர்களை தமிழக அரசு குழுவில் நியமித்துள்ளது. அப்படி செய்தாலும்கூட தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்துதானே செயல்பட வேண்டும். இணைந்து செயல்பட்டால்தான் தமிழகத்துக்கு நல்லது” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 

click me!