டிபன் பாக்ஸில் பணம் வைத்து ஓட்டு வாங்குவதான் திராவிட மாடல் வெற்றியா.? திமுகவை போட்டுத்தாக்கிய பிரேமலதா.!

By Asianet TamilFirst Published Feb 27, 2022, 9:00 PM IST
Highlights

"இந்தத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பது  உண்மை. சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு மக்களுக்கு தேர்தலின் மீதான நம்பிக்கை குறைந்ததே காரணம்”.

கோயம்புத்தூரில் திமுகவினர் டிபன் பாக்ஸில் பணம் வைத்து வீட்டுக்கு வீடு கொடுத்துள்ளனர். இதுதான் திராவிட மாடல் வெற்றியா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக பெரிய அளவில் சோபிக்கவில்லை. சில நகராட்சிகள் மற்று பேரூராட்சி வார்டுகளில் மட்டும் தேமுதிகவினர் சார்பில் போட்டியிட்டு சிலர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் கட்சியின் பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தலில் பண பலம், ஆட்சி பலம் எல்லாவற்றையும் தாண்டி எங்கள் கட்சி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 'திராவிட மாடல்' வெற்றி அடைந்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். 

கோயம்புத்தூரில் அவர்கள் டிபன் பாக்ஸில் பணம் வைத்து வீட்டுக்கு வீடு கொடுத்துள்ளனர். இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். இதுதான் திராவிட மாடல் வெற்றியா? இது போன்று வாக்குக்கு காசு கொடுத்து வெற்றி பெறுவது எங்களை பொறுத்தவரை உண்மையான வெற்றிக்குக்கூட சமம் அல்ல. தேர்தலின்போது கொரோனா நோயாளிகள் வாக்களிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை எல்லாமே திட்டமிடப்பட்டு எல்லாம் நடந்ததைப் போல உணர்கிறேன். உண்மையில் ஜனநாயக ரீதியில் இனி தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகம்தான். இனியாவது நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.

ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி, மத்தியில் உள்ள கட்சியாக இருந்தாலும் சரி அனைவரும் வாக்குக்கு காசு கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார்கள். தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்வதால் எதையும் மாற்ற முடியாது. வழக்குகளை ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டு விடுவார்கள். இந்தத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பது  உண்மை. சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு மக்களுக்கு தேர்தலின் மீதான நம்பிக்கை குறைந்ததே காரணம்” என பிரேமலதா தெரிவித்தார்.
 

click me!