நஞ்சும், வஞ்சமும் கொண்ட திமுகவுக்கு அதைப்பேச அருகதையுண்டா..? ஃப்ளாஷ்பேக் சொல்லி திருப்பியடிக்கும் பாமக..!

By Thiraviaraj RMFirst Published Dec 26, 2019, 1:38 PM IST
Highlights

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வன்முறை செய்ததாக பா.ம.க. மீது அவதூறு பரப்பிய திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக செய்தித்தொடர்பாளர் கே.பாலு  எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

பாமக இளைஞரணித் தலைவர் நாடாளுமன்ற வருகைப்பதிவில் மோசமாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை, அடுத்து, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வினோபாவே, டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு சென்று இது தொடர்பாக பிரச்னை செய்ததாக தகவல்கள் வெளியானது. பத்திரிகை அலுவலகத்தில் சென்று பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டதாக திமுக எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதில் அறிக்கையாக பாமக செய்தித்தொடர்பாளர் கே.பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘’பாட்டாளி மக்கள் கட்சி குறித்து செய்தி வெளியிட்டதற்காக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் வினோபா பூபதி தலைமையில் பா.ம.க.வினர் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வன்முறையில் ஈடுபட்டதாக திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சில பத்திரிகையாளர் அமைப்புகளும் உண்மையறியாமல் இதே புகாரை கூறியிருக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்டவை ஆகும். இவை ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்குள் பாட்டாளி மக்கள் கட்சியினர் நுழைந்திருந்தால் அங்கு இருந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுத்திருந்திருக்கலாம்.

அறையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையில் புகார் செய்திருக்கலாம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்கும் மேலாக இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் சில பத்திரிகை அமைப்புகளின் பெயர்களின் வெளியாகியுள்ள செய்திகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று அந்த நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் பா.ம.க.வுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவுக்குப் பிறகும் நடக்காத ஒன்றை வைத்து பா.ம.க மீது பழிசுமத்துவோரின் நெஞ்சம் முழுவதும் நஞ்சும், வஞ்சமும் நிறைந்துள்ளன என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

திமுகவையும், ஊடகங்களையும் இணைத்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது என்ன? மதுரை தினகரன் அலுவலகம் கொழுந்து விட்டு எரியும் காட்சியும், அதில் பணியாற்றிய அப்பாவிகள் மூவர் உடல் கருகி உயிரிழந்த காட்சியும் தானே. குடும்பத் தகராறில் தினகரன் அலுவலகத்தை எரித்து, 3 தொழிலாளர்களை சாம்பலாக்கிய திமுகவின் முதன்மைக் குடும்பம், குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு அதிகார சுகத்தை பங்கிட்டுக் கொள்வதற்காக ‘‘இதயம் இனித்தது; கண்கள் பனித்தன’’என்று கூறி கை குலுக்கிக் கொண்டன. ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட மூவரின் குடும்பங்கள் வாழ்வதற்கு வக்கற்று கிடக்கின்றனவே... அந்தக் குடும்பங்களை திமுக தலைமை கண்டு கொண்டதா? இப்படிப்பட்ட மாபாதகர்களுக்கு பத்திரிகையாளர்கள் நலன் குறித்து பேசுவதற்கு அருகதையுண்டா?”

 

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வன்முறை செய்ததாக பா.ம.க. மீது அவதூறு பரப்பிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கோரா விட்டால் அவர்கள் மீது அவதூறு வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கே.பாலு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!