ரெய்டில் சிக்கிய சசி குடும்பத்தாரின் 80 போலி நிறுவனங்கள்! நாளை பரப்பன அக்ரஹாரத்துக்கு பறக்கிறது ஐ.டி.! 

First Published Nov 21, 2017, 4:25 PM IST
Highlights
Investigation into Sasikala in Bangalore jail


பெங்களூரு சிறையில் இருக்கு சசிகலா மற்றும் இளவரசியிடம் வருமான வரித்துறையினர் நாளை விசாரணை நடத்த உள்ளனர். கர்நாடக சிறைத் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவர்களிடம் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் பொது செயலாளரான சசிகலா, முதலமைச்சர் கனவோடு இருந்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அவருக்குப் பிறகு, ஆர்.கே.நகர் மூலமாக டிடிவி தினகரனும் முதலமைச்சர் கனவில் மிதந்தார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். தற்போது அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளராக தினகன் இருந்து வருகிறார். தற்போது அவர்களுக்கு அதிமுகவை கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாக உள்ளது.

இந்த நிலையில்தான், வருமான வரித்துறையின் சோதனைக்கு ஆளானது சசிகலா குடும்பம். கடந்த 9 ஆம் தேதி துவங்கிய வருமான வரித்துறையின் சோதனை 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.

விவேக் வீட்டிலும், ஜெயா டிவியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளரான டி.டி.வி.தினகரன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பரோலில் வந்த சசிகலா, தமது சொத்துக்களை உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் பத்திரபதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்
வெளிவந்துள்ளதாக தெரிகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் ஆகியோர்களின் பெயர்களில் சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு குறித்து பொருளாதார உளவுத்துறை மூலம் கண்காணித்த பின்னரே சசிகலா குடும்பத்தினரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சசிகலாவின் குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் போயஸ் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போயஸ் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் மற்றும் லேப்டாப்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது தேவை என்றால் சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. இதற்காக சென்ற வாரம், வருமான வரித்துறையினர் பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு முறைப்படி கடிதம் எழுதி இருந்தனர். இதனை அடுத்து கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா, இளவரசி ஆகியோரிடம் விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து வருமான வரித்துறை நாளை சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

click me!