ஆளுங்கட்சியினர் அத்துமீறலால் அப்பாவி மக்கள் உயிரிழப்பு.. திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்.!

By Asianet TamilFirst Published May 15, 2022, 9:40 PM IST
Highlights

காவல் துறையினர் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கும் அளவுக்கு கொள்ளைக் கும்பல், இந்த திமுக அரசில் பலம் பெற்று உள்ளது. 

அரசின் அலட்சியம், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ஆளும் கட்சியினரின் அத்துமீறல் போன்றவற்றால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “:ஈரோடு முல்லை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அப்பகுதியில் கள்ள லாட்டரி சீட்டு விற்ற திமுக பெண் கவுன்சிலரின் கணவர் செந்தில்குமாரிடம் லாட்டரி சீட்டை வாங்கி வந்துள்ளார். 62 லட்சம் ரூபாயை இழந்துள்ளதால், தற்கொலை செய்து கொண்டார். கள்ள லாட்டரி விற்பனையை தடுக்க, காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது லாட்டரி சீட்டு அறவே தமிழகத்தில் ஒழிக்கப்பட்டது. எங்கள் ஆட்சிக் காலத்திலும் லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக விற்கப்படுவதை காவல் துறை இரும்புக்கரம் கொண்டு தடுத்து வந்தது. தற்போதும் அதே காவல்துறைதான் உள்ளது. ஆனால், லாட்டரி சீட்டு அதிபர்களுடன் சேர்ந்து, கள்ள லாட்டரி சீட்டுகளை திமுக, நிர்வாகிகளும் வியாபாரிகளும் விற்கிறார்கள். பிறகு இவர்கள் மீது எப்படி காவல் துறையால் தைரியமாக நடவடிக்கை எடுக்க முடியும்? அரசின் அலட்சியத்தாலும், கள்ள லாட்டரி சீட்டு விற்பனையாலும், ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களினாலும், அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். அடுத்தாக வேலுார் மாவட்டம், ராமநாயினிகுப்பம் ஊராட்சி மன்ற செயலாளர் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார்.

திமுக ஒன்றியக் கவுன்சிலர் அரி, ஊராட்சிக்கு வரும் நிதி முழுவதும் தனக்கு வழங்க வேண்டும் என வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவல் துறையினர் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கும் அளவுக்கு கொள்ளைக் கும்பல், இந்த திமுக அரசில் பலம் பெற்று உள்ளது. இதைப் பார்க்கும்போது, இந்த அரசின் விளம்பர ஆட்சி, இன்னும் எத்தனை நாள் நிலைக்கும் என்ற கேள்வி, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது” என்று அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

click me!