ப. சிதம்பரத்தை சிக்க வைத்த 10 லட்சம் ரூபாய்... அதிரடியாக வெளியான இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்!

By Asianet TamilFirst Published Aug 23, 2019, 7:39 AM IST
Highlights

எங்களுடைய சிக்கலை உணர்ந்துகொண்ட ப. சிதம்பரம், தன்னுடைய மகன் கார்த்தி சிதம்பரம் நடத்திவரும் வர்த்தகத்துக்கு கைமாறாக உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தோம். 

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள ஐஎன்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணி முகர்ஜி, அவருடைய கணவர் பீட்டர் முகர்ஜியின் வாக்குமூலங்கள் வெளியாகி உள்ளன. 
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்து வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேலும் 4 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ப. சிதம்பரம் கைதாக காரணமான தொழிலதிபர் பீட்டர் முகர்ஜி, அவருடைய மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோர் அளித்த வாக்குமூலங்கள் வெளியாகி உள்ளன. தற்போது அவர்கள் இருவரும் ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ள நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலங்கள் வெளியாகி உள்ளன.

 
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தில், “ நாங்கள் தொடங்கிய ஐ.என்.எக்ஸ்  நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வாரியத்தின் ஒப்புதலை பெற சிக்கல் இருந்தது. எனவே 2008-ம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை அணுக பீட்டர் முடிவு செய்தார். அந்த அடிப்படையில்தான் சிதம்பரத்தை இருவரும் சந்தித்தோம். 
எங்களுடைய சிக்கலை உணர்ந்துகொண்ட ப. சிதம்பரம், தன்னுடைய மகன் கார்த்தி சிதம்பரம் நடத்திவரும் வர்த்தகத்துக்கு கைமாறாக உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தோம். இந்த விஷயத்தை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த கார்த்தி சிதம்பரம், எங்கள் நிறுவனத்தின் அனுமதிக்கு பிரதி உபகாரமாக 10 லட்சம் அமெரிக்க டாலரை கேட்டார். அவ்வளவு தொகை சாத்தியமில்லை என்று பீட்டர் மறுத்தார்.


அதன் பின் கார்த்தி சிதம்பரம் தன்னுடைய நண்பர்களின் நிறுவனங்கள் என செஸ் மேனேஜ்மெண்ட், அட்வாண்டேஜ் ஸ்டேட்ரஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற இரு நிறுவனங்களின் பெயரைத் தெரிவித்தார். அந்த நிறுவனங்களின் வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறு கார்த்தி சிதம்பரம் கூறினார். அந்த இரு நிறுவனங்களையும் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் ஆலோசனை நிறுவனங்கள் என காட்டிக்கொள்ளும்படியும் தெரிவித்தார். பண பரிவர்த்தனைகளை பீட்டர்தான் கவனித்துவந்தார். எனவே எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை.” என்று வாக்குமூலத்தில் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல பீட்டர் முகர்ஜி அளித்துள்ள வாக்குமூலத்தில், “ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பாக ப.சிதம்பரத்தை இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்திருப்பேன். நாங்கள் அளித்த மனுவை கிடப்பில் போட்டுவிடப்போகிறார்கள் என்பதற்காக சந்தித்தேன். அந்தச் சந்திப்பின்போது தன் மகனின் வர்த்தக நலனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுமாறும் ப.சிதம்பரம் சொன்னார். வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறு  கேட்டுக்கொண்டார். கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தபோது 10 லட்சம் டாலர் கேட்டார். அதை சாத்தியமில்லை என்ற பிறகு, கார்த்தியின் யோசனைபடி அவர் கேட்ட தொகையில் ஒரு பகுதியாக 10 லட்சம் ரூபாயை அட்வாண்டேஜ் நிறுவனத்துக்கு செலுத்தினேன்.” என பீட்டர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

click me!