இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதுபோல், அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சியான அதில் அவர் பேசும்போது, நம் நாட்டு இளைஞர்கள் நமது அமைப்பு முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், அது முறையாக இயங்காதபோது ஆவேசமாக கேள்வி கேட்பார்கள். இதை நான் நல்ல விஷயமாக கருதுவதாக தெரிவித்தார்..
நமது இளைஞர்கள், அராஜகத்தையும், ஒழுங்கீனத்தையும், ஸ்திரமற்ற தன்மையையும் வெறுக்கிறார்கள். சாதியம், குடும்பத்துக்கு சலுகை காட்டுதல் ஆகியவையும் அவர்களுக்கு பிடிப்பது இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் நவீன இந்தியாவை கட்டமைப்பதில் இளம் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.
விமான நிலையங்களிலோ, சினிமா தியேட்டர்களிலோ யாராவது வரிசையை தாண்டி முன்னே சென்றால், அதை தட்டிக்கேட்பது இளைஞர்கள்தான். அத்துடன், அதை வீடியோ எடுத்து உடனே பரவச் செய்கிறார்கள்.
உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்குமாறு எனது சுதந்திர தின உரையில் வேண்டுகோள் விடுத்தேன். அதை மீண்டும் தெரிவிக்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும்.
2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதுவரையாவது, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்குவோம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்வோம் என மோடி அதிரடியாக தெரிவித்தார்
.
உள்நாட்டு தயாரிப்புகள், நமது மக்களின் வியர்வை மணம் வீசுபவை. மகாத்மா காந்தி, 100 ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய பொருட்களையே வாங்க ஊக்குவிக்கும்வகையில் மாபெரும் இயக்கம் தொடங்கினார்.
அவர் காட்டிய வழியில் நாம் செல்வோம். உள்நாட்டு பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க இளைஞர்கள், சிறு அமைப்புகளை உருவாக்கி மக்களிடையே இதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் மோடி பேசினார்..