இந்தியா- சீனா பேச்சுவார்த்தை மூலம் மோதலை தீர்க்க வேண்டும்.. ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2021, 12:23 PM IST
Highlights

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்ரஸ்சின் செய்தி தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக்கிடம், இதுகுறித்து  அண்டனியோ குட்ரஸ் என்ன கருதுகிறார் என செய்தியாளர்கள் கேட்டனர்.  

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே  மீண்டும் சிக்கிமின் நகுலா பாஸ் பகுதியில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் உடனே பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டுமென ஐநா பொதுச் செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் அண்டனியோ குட்ரஸ்  செய்தி தொடர்பாளர் இடம் செய்தியாக எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக்கிற்கு கிழக்கே உள்ள பாங்கோங் த்சோ ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது சீன வீரர்கள் நடத்திய வன்முறை தாக்குதலில்  இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் சீனா பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததைத் தொடர்ந்து இரு  நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் இருநாடுகளும் படைகளை எல்லையில் இருந்து திரும்ப பெற வேண்டுமெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்ட காரணிகளை முன்வைத்து அப்பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான 9-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்துள்ளது. சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த அந்த பேச்சுவார்த்தையில் சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து துருப்புகளை அகற்ற சீனா மறுத்துவருவதாக 
இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஆனாலும் சீனா விரைவில் பின்வாங்கும் என்று நம்புவதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பேச்சுவார்த்தை நடந்து முடிந்த சில மணி நேரங்களில் மீண்டும் சீன ராணுவத்தினர் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நகுலா பாஸில்  ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவத்தினர் எல்லை வழியாக சீனர்கள் ஊடுருவுவதை தடுத்து நிறுத்தி அவர்களின் பகுதிக்கு திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் சீன வீரர்கள் ஊடுருவலை கைவிடாமல் முன்னேற முயன்றனர்.

அப்போது திடீரென அவர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர்  தயாராக இருந்த இந்திய  வீரர்கள் சீன வீரர்களுக்கு பதிலடி கொடுத்து விரட்டி அடித்தனர். சில மணி நேரம் நீடித்த இந்த மோதலில் 20 சீன வீரர்கள் காயமடைந்தனர். அதில் இந்திய வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். இத்தகவலை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.  ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் சீனா ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனா ஊடுருவல் முயற்சியால் சிக்கிம் எல்லையில் புதிய பிரச்சினை உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்ரஸ்சின் செய்தி தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக்கிடம், இதுகுறித்து  அண்டனியோ குட்ரஸ் என்ன கருதுகிறார் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும் என நம்புகிறோம்.

இருநாடுகளுக்கும் இதையே  நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என கூறியுள்ளார்.  லடாக் மோதலின் போதே இருநாடுகளும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும், உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகள் மோதிக்கொள்வது ஆபத்தானது எனவும், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார் த்தையில் ஈடுபட வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தி இருந்த நிலையில் தற்போது அவரது சார்பில் மீண்டும் இதே கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  

 

click me!