சுதந்திர தின நிகழ்ச்சி.. பள்ளிக் குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 13, 2020, 11:47 AM IST
Highlights

கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.
 

கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தியில்;- இந்தியாவின் 74-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஆகஸ்ட் 15-ஆம் நாள் காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். இந்த ஆண்டு கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும், மாவட்டந்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும், சுதந்திரத் தின விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலைமை செயலக வளாகத்தில், இனிப்புப் பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வரி சார்பாக சமூக நலத் துறை அமைச்சர், மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, தனிமனித இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார். சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வரவேண்டாம் எனவும், சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!