கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Dec 11, 2020, 4:31 PM IST
Highlights

வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை உயர்நீதிமன்றம் அதிரடியாக விடுத்துள்ளது. 

வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை உயர்நீதிமன்றம் அதிரடியாக விடுத்துள்ளது. 

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015-ம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த 7.37 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, கார்த்தி சிதம்பரம்  மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்தும், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரியும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். அப்போது கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், வருமான வரித்துறை தொடர்ந்துள்ள இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவிக்க வேண்டும் என வாதிட்டார். அதேபோல வருமான வரித்துறை சார்பில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை உயர்நீதிமன்றம் அதிரடியாக விடுத்துள்ளது. வருமானவரி மதிப்பீட்டில் நடைமுறைகளை முடிக்கும் முன்னரே வழக்குப்பதிவு செய்தது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

click me!