12 வயதுக்குட்பட்ட சிறுவர்,சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் நிரந்தர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இந்தியாவில் கத்துவா, உன்னாவ் உள்ளிட்ட பல இடங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்களுக்கு பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சென்னை அயனாவரத்தில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இப்படி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த, போக்ஸோ சட்டத்தில் திருத்தம் செய்யும், அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் இந்த அவசர சட்டம் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அமலுக்கு வந்தது.
தற்போது இந்த அவசர சட்டத்திற்கு பதிலாக நிரந்தர சட்டம் கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், நிரந்தர சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டமசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாகும்.
இந்த சட்ட மசோதா பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அதன்படி 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக யார் மீதாவது குற்றம் சுமத்தப்பட்டால் அந்த வழக்குகள் 2 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை விதிக்க இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.
16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் அளிக்கப்படாது.
16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கின் தண்மைக்கேற்ப குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.
பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த சட்ட மசோதா விரைவில் குடியரசுத் தலைவர் அனுமதி பெற்று சட்டமாக்கப்படவுள்ளது