எங்களுக்கு யாரும் தேவையில்லை… தில்லா, தனியாக தேர்தல் களம் இறங்கும் காங்கிரஸ் கட்சி !!

By Selvanayagam PFirst Published Jan 14, 2019, 6:53 AM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்லில் உத்தரபிரதேச  மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடபோவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.


 

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாட்டிலேயே அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தில் வெற்றிக் கனியை பறிக்கும் கட்சியே பெரும்பாலும் மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை காணப்படுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் 71 தொகுதிகளில் வென்றது.

இதனால் இந்த முறை அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை சுதாரித்துக் கொண்டுள்ளன. நாடாளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் கூட்டணி அமைத்தனர்.

மேலும் இரு கட்சிகளும் மாநிலத்தில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்தன. சோனியா காந்தி, ராகுல்காந்தி வழக்கமாக போட்டியிடும் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வந்தாலும் 2 தொகுதிக்கு மேல் தரமாட்டோம் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவதுபோல் இது இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக மெகா கூட்டணி அமைக்க விரும்பிய காங்கிரசுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்றும்  அத்தனை தொகுதிகளிலும் பாஜகவைத்  தோற்கடிப்போம்  என்றும் 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை விட இந்த முறை காங்கிரசுக்கு அதிக வெற்றி கிடைக்கும் என தெரிவித்தார்.

click me!