மனசுல உள்ள பாரமே இறங்கிடுச்சு...! பூரிப்பில் கனிமொழி...!

First Published Dec 21, 2017, 11:43 AM IST
Highlights
In 2G case the judgment - justified - kanimozhi


2ஜி வழக்கு விவகாரத்தால் திமுக பல அவமானங்களையும், அவமரியாதைகளையும் சந்தித்திருந்தது. இது எல்லாவற்றுக்கும் தற்போது நீதி கிடைத்துள்ளது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. 

பின்னர் இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 21-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5-ஆம் தேதி அறிவித்தார். இந்த நிலையில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு, கனிமொழி பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய கனிமொழி, இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நியாயம் வென்றிருக்கிறது; நீதி வென்றிருக்கிறது. 7 வருட போராட்டத்துக்கு பிறகு நியாயம் கிடைத்துள்ளது. இந்த தீர்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

இந்த தீர்ப்புக்குப் பிறகு இன்னும் அதிக நேரம் அரசியலுக்காக செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. 7 ஆண்டுகள் எந்த வித அடிப்படையும் இல்லாமல் திமுக பல அவமானங்களையும், அவமரியாதைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. இது எல்லாவற்றுக்கும் நியாயம் கிடைத்துள்ளது; நீதி வென்றுள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

click me!