இந்தியை கற்றுத்தரக் கேட்டு தமிழக மக்கள் கெஞ்சப்போகிறார்கள்... பாஜக நிர்வாகி ஆருடம்..!

By Thiraviaraj RMFirst Published Oct 3, 2019, 5:42 PM IST
Highlights

இந்திக்கு ஆதரவாக தமிழகத்தில் மக்கள் போராட்டம் விரைவில் வெடிக்கும். இந்தியை கற்றுத் தாருங்கள் என்று மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
 

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மோடி, நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு செயல் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றி வருகிறார். தூய்மை பாரதம் திட்டம் மூலம் ஊராட்சிகளில் கூட கழிவறை கட்டப்பட்டு விட்டது. தேச பிதா காந்தியின் கொள்கைகளுக்கும், பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என்று, காங்கிரசார் கூறியுள்ளனர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை பாஜக கொண்டாடி வருகிறது. காந்தியின் கொள்கைகளுக்கும், பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கோவருக்கும், காந்திக்கும் தொடர்பு உண்டு. பாஜகவிலும், காந்தீய சிந்தனைகள் கொண்ட தலைவர்கள் உள்ளனர். ஏழை மாணவர்களை கல்வியில் உயர்ந்தவர்களாக்க தொடங்கப்பட்டது, நவோதயா பள்ளிகள். தமிழகத்தில் இப்பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இந்தியை திணிக்க முயல்வதாக கூறுகிறார்கள். பாஜக ஒரு போதும் இந்தியை திணிக்க முயலவில்லை.

இந்திக்கு ஆதரவாக தமிழகத்தில் மக்கள் போராட்டம் விரைவில் வெடிக்கும். இந்தியை கற்றுத் தாருங்கள் என்று மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும். அரியானா, மராட்டிய மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு அளிக்கும். இது தொடர்பாக அ.தி.மு.க. அமைச்சர்கள், பாஜக மேலிட பார்வையாளர் முரளிதரராவை சந்தித்து பேசியுள்ளனர். நாங்குநேரியில் பாஜகவுக்கு தொண்டர்கள் அதிகம். இதனால் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். இதுபோல விக்கிரவாண்டி தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளரே வெற்றி பெறுவார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனேயே கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதம் நடக்கும் என்று கூறுகிறார்கள். நவம்பர் மாதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தேர்தலை டிசம்பர் மாதம் நடத்தலாம் என்பது எனது கருத்து’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!