உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நமது வேட்பாளர் டாக்டர்.பாரிவேந்தர்!! தொகுதி கன்ஃபார்ம் ஆனதால் ஓட்டு வேட்டை...

By sathish kFirst Published Mar 5, 2019, 9:38 AM IST
Highlights

பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளார்.

பிஜேபிகூட்டணியில் இருந்து வெளியேறி கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்றுதான் பேச்சுகள் கிளம்பின. தற்போதைய நிலையில், அந்த கட்சியை அதிமுக பிஜேபி  தலைமை சீண்டாத நிலையில், திடீரென இப்போது, திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து  ஒரு சீட் வாங்கிவிட்டார்.  

கடந்த 2014ம் அண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஐஜேகே பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தது. பெரம்பலூரில் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் அதிமுக வேட்பாளர் மருதுராஜாவிடம் தோல்வியடைந்தார். ஆனால் இந்த தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததுமே கடும் கோபத்துக்கு ஆளானபாரிவேந்தர் திமுக கூட்டணியில் ஆதரவு தெரிவித்தார். 

பார்கவ குல சமூகத்தவர்கள் ஆதரவு இப்போது திமுகவுக்கு மிகவும் பலமாக இருக்கும் என நம்பிக்கையில் பாரிவேந்தரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. மேலும் இந்த டீலிங்கில் மிகப்பெரிய விஷயம் என்னன்னா? ராமதாஸ் கட்சியினர் நிற்கும் அத்தனை தொகுதிகளிலும், அவர்களைத் தோற்கடிப்பதற்கு அனைத்து வகையிலும் உதவுவதாக உறுதி அளித்து ஸ்டாலின் மனதில் இடம்பிடித்துள்ளார் பாரிவேந்தர்.

அதுமட்டுமல்ல, பாமக நிற்கும் தொகுதியில், திமுக அணியில் யார் நின்றாலும் அவர்களது தேர்தல் செலவை தானே ஏற்ப்பதாகவும், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து ஜெயிக்கவைக்க தயார் என ஸ்டாலினிடம் உறுதியளித்த பின் திமுகவில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அது கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் என இரண்டில் ஒரு தொகுதி கேட்கப்பட்ட நிலையில், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரவி, “எங்களுக்கு விருப்பமான தொகுதி கள்ளக்குறிச்சிதான் அதைக் கேட்டிருக்கிறோம் விரைவில் முடிவு செய்வோம் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில், பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர் பாரிவேந்தரின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர். இதற்காக போஸ்டர், பேனர் என அனைத்து வேலைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த முறை பெரம்பலூரில் சுமார் 50 கோடி வரை செலவு செய்து தோற்றதால், இந்த முறை திமுக வாக்கு வங்கியோடு, பணபலத்தில் பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்பார் என சொல்லப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதியை கைப்பற்றியுள்ளார் பாரிவேந்தர். அவர் கட்சிக்கென்று தனி சின்னம் எதுவும் இல்லாததால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

click me!