சைரன்ல கை வெச்சுப் பாரு! அப்புறம் என்னாகுறேன்னு தெரியும்: டிரைவரை தெறிக்கவிட்ட அமைச்சர்.

By Vishnu PriyaFirst Published Oct 25, 2019, 5:16 PM IST
Highlights

ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சில தனியார் மருத்துவமனைகளோடு தொடர்பு வைத்து, ஆபத்தான நிலையில் இருப்பவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாமல், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். -விஜயபாஸ்கர் (போக்குவரத்து துறை அமைச்சர்)

*லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அனைவரும் பாராட்டும் வகையில் மக்களின் ஆதரவை பெற்றுள்ளோம். 2021 சட்டசபை தேர்தலில் இன்னும் வலிமையான கட்சியாக களமிறங்க வேண்டும். இதை உணர்ந்து, கட்சியின் கட்டமைப்பை விரிவாக்கம் செய்துள்ளோம். -கமல்ஹாசன் (ம.நீ.ம. தலைவர்)

*அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது மக்களுக்கு வெளிப்படையாக, ஆதாரப்பூர்வமமாக தெரிய வந்திருக்கிறது. இனிமேலாவது போலீஸ் துறை சுதந்திரமாக செயல்பட, முதல்வர் நடவடிக்கை எடுத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். 
-மு.க.ஸ்டாலின் (தமிழக எதிர்க்கட்சி தலைவர்)

*ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தும் வகையில் அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். பண்டிகை காலங்களில் பல மடங்கு கட்டணத்தை அதிகரிக்க வைத்து, அதை எந்த ஒளிவு மறைவுமில்லாமல் இணையதளத்தில் ஏற்றுகின்றனர். பொது மக்களின் நலன் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருக்குமேயானால் இந்த கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். 
-கே.எஸ்.அழகிரி (தமிழக காங் தலைவர்)

*ஆதிதிராவிடர் மக்களுக்கான பஞ்சமி நிலங்களை, மாநிலம் முழுவதும் ஏராளமானோர் அபகரித்துள்ளனர். அதை கண்டறிய ஆணையம் அமைக்க வேண்டும்! என அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் வேண்டுகோள் வைத்தேன். அவரும் ஆணையம் அமைத்தார். ஆனால் ஜெயலலிதா முதல்வராக வந்ததும் அதை செயலிழக்க செய்துவிட்டார். 
-திருமாவளவன் (லோக்சபா எம்.பி.)

*வடமாநிலங்களைச் சேர்ந்த பாலிவுட் நடிகர்களை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். தென்மாநில நடிகர்களை அவர் புறக்கணித்துள்ளார். இந்திய பொருளாதாரத்திற்கு தென் மாநில சினிமா நடிகர்களும் உதவுகின்றனர். பிறகு ஏன் பிரதமர் மோடி, தென்  மாநில சினிமா நடிகர் நடிகைகளை சந்திக்காமல் புறக்கணித்து, பாகுபாடு காட்ட வேண்டும்?
-குஷ்பு (நடிகை)

*சசிகலாவை காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டுதான் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். ஊழல் வழக்கில் கைதானோரையும், நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும். 
-ராஜா செந்தூர் பாண்டியன் (சசியின் வழக்கறிஞர்)

*எங்கள் மருமகன் டாக்டர் ஜோதிமணியின் எந்த செயல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. அவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பும் இல்லை. 
-செல்வி, (கருணாநிதியின் மகள்)

*நாடு முழுவதும் கல்லூரிகளில், பட்டப்படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்! என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேஷ்பொக்ரியால் அறிவித்துள்ளார். இது கிராமப்புற மாணவர்களின் பட்டப்படிப்பு கனவை சிதைக்கும் முயற்சியாக அமையும். 
-ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

*தி.மு.க.வின் ‘முரசொலி அறக்கட்டளை’ இடம் பஞ்சமி நிலம் என புகார் வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான ஆதாரங்களை வைகோ கூறியுள்ளார். எனவே அவர் ஸ்டாலினிடம் பேசி, அந்த நிலம் யாருக்குச் சொந்தமோ, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனும் கடமையை வலியுறுத்த வேண்டும். 
- பொன்.ராதாகிருஷ்ணன் (மாஜி மத்தியமைச்சர்)


*தேவையில்லாமல் சைரன் ஒலித்தால் ஆம்புலன்ஸ் டிரைவரின் உரிமம் ரத்து செய்யப்படும். ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சில தனியார் மருத்துவமனைகளோடு தொடர்பு வைத்து, ஆபத்தான நிலையில் இருப்பவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாமல், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். 
-விஜயபாஸ்கர் (போக்குவரத்து துறை அமைச்சர்)

click me!