ஒட்டுகேட்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் சத்தியம் செய்யுங்கள்.. மத்திய அரசின் மென்னியை பிடிக்கும் கமல்நாத்..

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2021, 4:43 PM IST
Highlights

அந்த உளவு செயலியை பயன்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற செய்தி நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாஜகவில் சொந்தக் கட்சியில் அமைச்சர்கள் கூட உளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெகாசஸ் உளவு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசிடம் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத் வலியுறுத்தியுள்ளார். பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை வாங்கவில்லை என்று நீதிமன்றத்தில் சத்தியம் செய்யுங்கள் என அவர் கூறியுள்ளார். பெகாசஸ் என்ற உறவு செயலியின் மூலம் இந்தியாவில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் என பல தரப்பினரின் தொலைபேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை மத்திய அரசு மறுத்தாளும் ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 10 நாடுகளில் இத்தகைய உளவு செயலியை அரசாங்கங்கள் பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அந்த உளவு செயலியை பயன்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற செய்தி நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாஜகவில் சொந்தக் கட்சியில் அமைச்சர்கள் கூட உளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிடம் இருந்து பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை இந்தியா வாங்கியுள்ளது குறித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஜூலை 28 அன்று தகவல் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இது விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக தங்களது கருத்துக்களையும், ஆதங்கங்களையும் வெளிபடுத்தி வருகின்றன. குறிப்பாக முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத், பெகாசஸ் உளவு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும், அத்தகைய மென்பொருளை வாங்கவில்லை என்று நீதிமன்றத்தில் சத்தியம் செய்யுங்கள், யாருடைய தொலைபேசியையும் ஒட்டுக் கேட்க வில்லை என்று நீதிமன்றத்திற்கு கடிதம் கொடுங்கள், இந்த உளவு, மக்கள் உரிமைகள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தூக்குதல். அடுத்த 15 நாட்களில் இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடிக்கும், இந்த வழக்கு ஒன்றும் காங்கிரஸ் கட்சியால் வெளிகொணரப்பட்டது அல்ல, சர்வதேச ஊடக அமைப்புகளால் வெளி கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2017 ஜூலை மாதம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார், அதன் பிறகு 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்த உளவு பார்க்கும் வேலை நடந்துள்ளது, மோடி அரசாங்கத்தின் ஆட்சியில் இலட்சக்கணக்கான மக்களின் மொபைல் போன்கள் ஒரு இஸ்ரேலிய நிறுவனத்தால் கண்காணிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.
 

click me!