அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அதற்காக தமிழக சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு காரணமகா டிடிவி தினகரன் அணியினர் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்தனர்.
இதுநாள்வரை எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஊழலுக்கு எதிராக பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் அணிகள் ஆட்சிப்பொறுப்பில் அமர துணை நின்றுள்ளார் என்று கூறினார்.
அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அதற்காக தமிழக சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றார்.
22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு சூழ்நிலை வந்தால் திமுக நல்ல முடிவு எடுக்கும் என்றும், தமிழக சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.