
நம்முடைய தலைவர் கலைஞர் மட்டும் இருந்திருந்தால் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பணிகளைப் பார்த்து கண்ணீர் வடித்திருப்பார் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
முதல்வர் துபாய் பயணம்
தமிழக சட்டப்பேரவையின் 2022 - 2023-ஆம் ஆண்டுக்காண நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. ஆறாவது நாளாக நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் உரையாற்றினார்கள். பின்னர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் செல்வது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பாராட்டிப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் உள்ள தொழிலதிபர்களை ஈர்க்க தானாகவே முன்வந்தும், ஆயிரம் வேலைகள் இருக்கும் சூழலிலும் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் கடந்து துபாய் செல்கிறார்.
துரைமுருகன் நெகிழ்ச்சி
கடல் கடந்து இன்றைய தினம் துபாய்க்கு செல்லும் முதல்வர் பல நாட்டு சர்வதேசத்தினர் கூடும் உலகக் கண்காட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார் என்றால், அது இன்று உலகச் செய்தி ஆகும். அதன் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முதலீட்டாளர்களையும் தமிழ் நாடு ஈர்க்கும். குறிப்பாக சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை முன்னேற்றம் என எல்லாத் துறைகளிலும் இந்த பத்து மாதக் காலத்தில் 100 ஆண்டு கால அனுபவத்தோடு செய்வதைப் போல முதல்வர் செய்திருக்கிறார். இதற்காக நான் அவரை மனதார பாராட்டுகிறேன்.
உலகப் புகழ் பெறணும்
இந்த அவையில், இப்போது நம்முடைய தலைவர் கலைஞர் மட்டும் இருந்திருந்தால் முதல்வரின் இந்தப் பணிகளைப் பார்த்து கண்ணீர் வடித்திருப்பார். மற்றவர்கள் அதைப் பார்ப்பதற்கு முன்பாக அந்தக் கண்ணீரை அவர் துணியால் துடைக்கும் காட்சியை நான் நினைத்துப் பார்க்கிறேன். இங்குள்ள அனைவருடைய சார்பாகவும் நம்முடைய முதல்வரின் பயணம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நீங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகப் புகழ் பெற வேண்டும் என்றும் மனதார வாழ்த்துகிறேன் ” என்று துரைமுருகன் பேசினார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.