பேருந்து கட்டண உயர்வை குறைக்க தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் சில யோசனைகளை கூறியுள்ளார்.
தமிழக அரசு பேருந்துகளில் 100% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு அறிவித்து 20ம் தேதி காலை முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. மக்கள் மீது அக்கறையற்ற அரசின் செயல், மக்களுக்கு மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.
தினக்கூலிகள், மாத ஊதியதாரர்கள் ஆகியோர் பேருந்து கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் ஆகியவற்றை காரணமாகக் காட்டி கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், முறையான நிர்வாகமின்மையும் போக்குவரத்து துறையில் நடக்கும் ஊழல்களுமே அந்த துறை நஷ்டத்தில் இயங்க காரணம் என போக்குவரத்து துறை உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தனியாரிடம் இருந்து பேருந்துகளை அரசு எடுத்துக் கொண்டது மக்களுக்கு சேவை செய்யவே. டீசல் மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தினால், பேருந்து கட்டண உயர்வை குறைக்க முடியும் என தெரிவித்தார்.