அடுத்த ஆட்சி என்னோட ஆட்சி தான்... சூளுரைத்த சசிகலா... ஓபிஎஸ்-இபிஎஸ் நிலை என்னாகும்?

By Narendran SFirst Published May 17, 2022, 9:47 PM IST
Highlights

அடுத்த அமைய உள்ள ஆட்சி தனது ஆட்சிதான் என்றும் அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும் என்றும் சசிகலா தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த அமைய உள்ள ஆட்சி தனது ஆட்சிதான் என்றும் அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும் என்றும் சசிகலா தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா கடந்த ஆண்டு ஜனவரி இறுதியில் விடுதலை ஆனார். பெங்களூரில் இருந்து சென்னை வந்த சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் வழி நெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் விடுதலையானதால் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி படுத்தும் வகையில் சசிகலாவும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். ஆனால் திடீரென அரசியல் களத்தில் இருந்து அவர் பின்வாங்கினார். சசிகலா திடீரென கட்சியின் நலன் கருதி அரசியலை விட்டு ஒதுங்குவதாக கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அறிவித்தார். திடீரென ஆன்மிக பயணம் கிளம்பி கோவில் கோவிலாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆன்மீக பயணம் என்றாலும், ஆங்காங்கே அரசியலும் பேசி வருகிறார். அண்மையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இயக்கம் உன்னத நிலையை அடைய, நானே காரணமாக இருப்பேன். அது வரை ஓயமாட்டேன் என்பதையும் இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். நாளுக்கு நாள் அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளார் ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அமைதிகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சசிகலா தஞ்சை விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சிவகங்கைக்கு சென்ற அவர் அங்கிருக்கும் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் இணைவது நிச்சயம், அடுத்து எங்களுடைய ஆட்சி. அது மக்களுடைய ஆட்சியாக இருக்கும். ஓராண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள், எந்த நல்லதும் செய்யவில்லை. அடுத்த ஆட்சி எனது ஆட்சிதான். அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். மத்திய அரசை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை. மக்களுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செய்யவேண்டும் என்று தெரிவித்தார். 

click me!