அதிமுகவை கைப்பற்றுவதற்காக சசிகலா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக இம்முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் செய்தியாளர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவது மட்டுமில்லாமல் மேடைகளில் பேசுவது அரசியல் அரங்கில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்றும் கழகத்தை கைப்பற்றுவேன் என்றும் சசிகலா பேசி வந்தாலும் யாரையும் குறித்தும் பெரிய அளவிலான விமர்சனங்களை முன்வைக்காமல் பொறுமையாக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நாம் ஒன்றாக வேண்டும் என்றும் கழகம் வென்றாக வேண்டும் என்று சசிகலா ஆரம்பம் முதல் கூறி வருகிறார். இதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு காது கொடுத்து கேட்கவில்லை.
ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் சசிகலா தரப்பும் ஆலோசனை நடத்தும் அளவுக்கு நிலைமை மாறி உள்ளது என்றும், ஆனால் சசிகலா வரலாம், அவரது குடும்பத்தினர் ஒருவரும் உள்ளே வரக்கூடாது என்றும் டிடிவி தினகரன் கட்டாயமாக உள்ளே வர கூடாது என்று நிபந்தனை போடப்பட்டுள்ளது என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போதே கட்சியை பலப்படுத்த அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இருப்பினும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வரிசையாக நடைபெற்ற ரெய்டு, சசிகலாவின் சுற்றுப்பயணம், கொடநாடு வழக்கு,டிடிவி தினகரன் என பல்வேறு காரணங்களால் அது, அடுத்த கட்டத்திற்கு நகராமல் கிடைப்பில் கிடந்தது.
தற்போது அதிமுகவின் உள்கட்சி தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று உள்ளனர். இதை தொடர்ந்து கிராமம் கிராமாக சென்று அதிமுகவை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். ‘தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் இருந்து வரும் அரசியல் கட்சியினர் அவரது வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
வாழ்த்து சொல்ல வரும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது சசிகலா விவகாரம், அதிமுக மேல்சபை எம்.பி வேட்பாளர்கள் யார் ? என பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டு வருகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி வாரியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வருகிற 26-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருகிறார். அப்போது அவரை சந்தித்து ஆலோசனை நடத்தவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அப்போது திமுக ஆட்சி தொடர்பான புகார்களை அளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாகவும் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர். இந்த தகவல் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !