ஆனால் பொதுமக்கள் அதை சரிவர கடைபிடிப்பது கிடையாது. இதில் மாவட்ட நிர்வாகம் கவனமுடன் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெளியில் சென்றால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.
தமிழகத்தில் 35 சதவீத மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேதனை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியதாவது:
கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுப்பதற்கு நாம் ஏற்கனவே பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பொதுமக்கள் அதை சரிவர கடைபிடிப்பது கிடையாது. இதில் மாவட்ட நிர்வாகம் கவனமுடன் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெளியில் சென்றால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.
கடைகளில் பொருட்களை வாங்கும் பொழுது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வீட்டிற்கு சென்ற உடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், இவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க முடியும், மாவட்ட நிர்வாகம் இதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். போலீசாரும் பொதுமக்கள் மத்தியில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இப்போது தமிழகத்தில் 35 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் முக கவசம் அணிவது கிடையாது. எனவே அனைவரும் முகக் கவசம் அணியக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.