மீண்டும் சொல்கிறேன் விநாயகரை வீட்டில் வைத்து கொண்டாடுங்கள்.. எச்சரித்த அமைச்சர் சேகர் பாபு..

By Ezhilarasan BabuFirst Published Sep 8, 2021, 9:53 AM IST
Highlights

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கோயில் நிலங்களை விரைந்து அளவிடவதற்கான ரோவர் கருவிகளை கொண்டு அளவீடு செய்யப்பட உள்ளது. இதனை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். 

விநாயகரை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் மோடி தான் விநாயகர் சதூர்த்தியை வீட்டில் வைத்து கொண்டாட சொல்லி இருக்கிறார். அதைதான் தமிழக அரசு பின்பற்றுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.இந்நிலையில் கொரோனா வைரசை காரணம் காட்டி எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதாவது விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்காமல், வீடுகளில் வைத்து தனிமனித வழிபாடு செய்து, தனிநபராக கொண்டு சென்று சிலையை கறைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஆனால் அரசின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் தொடர்ந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மூன்றாவது அலை தாக்கக்கூடும் என்பதால் மக்கள் அதிகமாகக் கூடும் பண்டிகை மற்றும் திருவிழாக்களுக்கு மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ள நிலையில் மாநில அரசு அதை பின்பற்றும் நிலையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் கோவில் நிலங்களை விரைந்து வேகமாக அளவிடும் ரோவர் கருவிகளிட் பயன்பாட்டை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 61.99 ஏக்கர் கோயில் நிலத்தை இன்று முதல் அளவிடப்பட உள்ளது. கோவில் நிலங்களை வேகமாக அளவிடுவதற்காக 50 ரோவர் கருவிகளை வருவாய் துறையிடம் கேட்டிருக்கிறோம். அது வந்தவுடன் பணிகள் தொடங்கும். அரசியல் களத்தில் திமுக இருக்கிறது என்பதற்காக அண்ணாமலை எதையெதையோ தெரிவித்து வருகிறார். மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்த முதல்வராக முதலமைச்சர் இருக்கிறார். எனவே தற்போது விநாயகர் சிலையை வைத்து பாஜக அரசியல் செய்யப் பார்க்கிறது.

விநாயகர் சதுர்த்தியை தாராளமாக கொண்டாடுங்கள், ஆனால் விநாயகரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யுங்கள், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடுமையாக தமிழகம் கடைபிடிக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்கியுள்ள சில வடமாநிலத்தை வைத்து தமிழக பாஜகவினர் பேசி வருகின்றனர். அனுமதி வழங்காத பாஜக மாநிலங்களும் உள்ளன. எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும்,  மீண்டும் மீண்டும் சொல்கிறேன் விநாயகர் சதுர்த்தியை வீட்டில் வைத்து கொண்டாடுங்கள். தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!