தப்பா பேசிட்டேன்... இப்போ தான் அரசியல் பக்குவம் வந்திருக்கு... திமுகவால் நடுக்கத்தில் ராஜேந்திர பாலாஜி..!

By Thiraviaraj RMFirst Published Jun 30, 2021, 10:24 AM IST
Highlights

விருது நகர் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவது உறுதி என எச்சரித்து இருந்தார். 

சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகிறேன் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமையில் உள்ளேன். அடுத்த சில நாட்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்.

கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுகிறேன். சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி வரும் பொய், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் பதவியிலும், அரசியல் பொது வாழ்க்கையிலும் செயல்பட்டு உள்ளேன். செயல்பட்டும் வருகிறேன்.

சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகிறேன். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் கழகத்திற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். துரோகத்தையும் சூழ்ச்சியையும் முறியடிப்போம். ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் ராஜேந்திர பாலாஜி. இதனையடுத்து விருது நகர் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவது உறுதி என எச்சரித்து இருந்தார். 

click me!