
மறைந்த முன்னாள் ஜெயலலிதாவால் டம்மியாக வைக்கபட்டிருந்த செங்கோட்டையன் சசிகலாவின் தயவால் அதிமுக அவைத்தலைவர், சட்ட சபை அவை முன்னவர் பதவியை பெற்றார். பன்னீர் எடப்பாடி இணைந்ததர்க்குப் பிறகு சசிகலா பொதுசெயலாளராக எடுத்த முடிவு செல்லாது என தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து, முதலில் பறிபோனது கட்சியின் அவைத்தலைவர் பதவி. ஏனென்றால் அவைத்தலைவராக மதுசூதனை இருந்தார்.
தற்போது தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து வரும் ஜனவரி 8ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்திருக்கும் நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நேற்று வரை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையனை டம்மியாக்கியுள்ளார் எடப்பாடியார்.
ஜெயலலிதா இருந்த சமயத்தில் பலமுறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடம் இருந்து அமைச்சர் பதவியை பிடுங்கிவிட்டு டம்மியாக வைத்திருந்தார். பலவருடங்களுக்குப்பின் சசியின் தயவில் பதவிகள் கிடைத்தது அதுவும் போய்விட்டது என பல வருத்தங்களில் இருக்க, தற்போது அவை முன்னர் பதவியை பறித்து விட்டனர்.
ஓ.பன்னீரை அவை முன்னவராக நியமித்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமியிடம் எக்கச்சக்க ப்ளான் இருக்கிறதாம் கடந்த “2011 முதல் 2016 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பன்னீர்தான் அவை முன்னவராக இருந்தார். அம்மா மறைவிற்கு பின், முதவராக இருந்த பன்னீர் சசியோடு சண்டை போட்டுக்கொண்டு சென்ற பிறகு அவை முன்னவராக செங்கோட்டையன், சசிகலாவால் நியமிக்கப்பட்டார்.
அப்போதே எடப்பாடி பழனிசாமிக்கு லேசான நெருடல் இருந்தது. ஏனென்றால் செங்கோட்டையனை மீறி கொங்கு மண்டலத்தில் இருந்து வளர்ந்து வந்தவர்தான் எடப்பாடி. அவை முன்னவர் என்றால் முதல்வருக்கு அடுத்த இடத்தில் அமர வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனக்கு அடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதன் பிறகு செங்கோட்டையனை அமர வைத்தார்.
அப்போதும் செங்கோட்டையன் அவை முன்னவராகத்தான் இருந்தார். இந்த நிலையில் ஓ.பி.எஸ். சேர்ந்த பின் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் செங்கோட்டையனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. அவரது கட்சி அவைத் தலைவர் பதவி மதுசூதனனுக்கே திரும்பியது. செங்கோட்டையன் கூடுதலாகக் கவனித்துவந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு கை மாறியது.
பள்ளிக் கல்வித் துறையில் செங்கோட்டையனின் செயல்பாடு அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தி வந்த நிலையில்... இப்போது எடப்பாடி தன்னை கொங்குமண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டு செங்கோட்டையனை மீண்டும் டி-பிரமோட் செய்துள்ளார்.
இனி முதல்வர் எடப்பாடி , அவை முன்னவர் ஓ.பன்னீர், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை அடுத்து நான்காவது இடத்தில்தான் செங்கோட்டையன் அமர்த்தப்படுவார். இது முதல் மாங்காய்! இப்போது புதிதாக தினகரன் அதிமுகவைத் தோற்கடித்து சபையில் நுழைந்திருக்கிறார். அவர் விவகாரமான கேள்விகளைக் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அவை முன்னவராக ஓ.பன்னீரை நியமித்தால் அவருக்கு தினகரன் பற்றிய பின்னணி தெரியும் என்பதால் பதில் சொல்ல வசதியாக இருக்கும் என்று கருதுகிறார் முதல்வர்.
அடுத்ததாக ஓ.பன்னீர் அணியைச் சமாளிக்கும் வகையிலானது. அதாவது அணிகள் இரண்டும் இணைந்த பின் ஓ.பன்னீர் அணியினருக்குப் போதிய வகையில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற புகார் அவர்கள் தரப்பில் இருந்து இன்னும் புகைகிறது. இதுபற்றி பன்னீரும் பல சமயங்களில் எடப்பாடியிடம் பேசியிருக்கிறார்.
ஆனால் ஆட்சிமன்றக் குழு, செய்தித் தொடர்பாளர் குழு போன்றவற்றை தவிர ஓ.பன்னீர் அணியினருக்கு இன்னும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அவர்களை சமாதானப்படுத்துவதற்காகவும் இந்த அவை முன்னவர் அஸ்திரத்தை ஏவியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இப்படியாக ஒரே பதவியின் மூலம் செங்கோட்டையனை மேலும் டம்மியாக்குவது, ஓ.பன்னீரைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது, சட்டமன்றத்தில் தினகரனைச் சமாளிப்பது என சசி கொடுத்த பதவியை வைத்தே மொத்தமாக முடிக்க ப்ளான் போட்டுள்ளார் எடப்பாடியார் என அதிமுக வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.