
நடிகர் ரஜினியை விமர்சனம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜு, திடீரென அந்தர் பல்டி அடித்து, நானும் ரஜினி ரசிகன்தான் என கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், கடந்த வாரம் மாவட்டம் வாரியாக தனது ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, பேசிய அவர் தமிழக அரசியலில் சிஸ்டம் இல்லை என பேசினார். மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகி எனவும் கூறினார்.
இதற்கு, அதிமுக அமைச்சர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, "ரஜினிகாந்த் ஒரு வியாபாரி. இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார்.
நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்துவிட்டனர். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை. கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் அறிவார். நடிகர்கள் களம் காணும் கட்சிகளால் பலனில்லை" என கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, நானும் ரஜினி ரசிகன்தான் என கூறினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"நடிகர் ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. நானும் ரஜினி ரசிகன்தான். ஆனால், அவர் மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என கூறியதும், தமிழக அரசில் சிஸ்டம் சரியில்லை தெரிவித்ததையும் எங்களால் ஏற்க முடியாது.”
இவ்வாறு அவர் கூறினார்.