காட்டுமிராண்டித் தனமான துப்பாக்கிச்சூடு ஏன்? உங்களுக்கு 2 வாரம்தான் டைம்... பதிலளிக்க கெடு விதித்த மனித உரிமை ஆணையம்!

First Published May 23, 2018, 1:34 PM IST
Highlights
Human Rights Commission Notice - Notice to the Government of Tamil Nadu in 2 weeks reply


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 100-வது நாளான நேற்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி முழுவதும் 144 தடை உத்தரவி பிறப்பித்தது. 144 தடை உத்தரவையும் மீறி, போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட  முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

இதை அடுத்து போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. போலீஸ் வாகனங்கள், போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்ற
போராட்டக்காரர்கள், ஆட்சியர் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த அரசு வாகனத்துக்கும் தீ வைத்தனர். சுமார் 110 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தின் இறுதியாக போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 12 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தது யார் எனக் கேட்டு, வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, பார்வேந்தன், காளிமுத்து உள்ளிட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!