
நடிகர் கமலஹாசன் எப்போதுமே இந்து விரோதி என்ற நிலை மாறி தற்போது தீவிரவாதிகளின் ஆதரவாளராக மாறிவிட்டார் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் தமிழ் வார இதழில் நடிகர் கமல்ஹாசன் தொடர் ஒன்றை எழுதிவருகிறார்.
இந்த வாரம் வெளியாகியுள்ள தொடரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கமல்ஹாசனிடம் கேட்டிருக்கும் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ள கமல், ''எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்? என்ற சவாலை இனி இந்து வலதுசாரியினர் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவிக்கிடக்கிறது. இந்தத் தீவிரவாதம் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் முன்னேற்றமோ பெருமையோ அல்ல" என்று குறிப்பிட்டிருந்தார்.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பாஜக,ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கமலஹாசனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கமல் எப்போதுமே இந்துவிரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டார் என்று கிண்டல் செய்துள்ளார்.
கமல் எப்போதுமே இந்துவிரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு promote ஆகி உள்ளார். தேசபக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்
இதனிடையே நடிகர் கமலஹாசன் மீது உத்தரபிரதேச மாநிலத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.