
திண்டுக்கல்
கமல்ஹாசனிடம் ஒழுக்கம் இல்லை. அவர் எப்படி மக்களுக்கு சேவைப் பணியாற்றுவார் என்று வேடசந்தூரில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டியளித்தார்.
இந்து முன்னணி ஒன்றியச் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூருக்கு வந்திருந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா வருகிற 12–ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்துள்ளோம். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் வருவதாக உறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி திரைப்படக் கலைஞர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.
நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலம் வேறு. தற்போது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சமுதாயத்தில் தூய்மை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறியுள்ளார். அவரிடம் ஒழுக்கம் இல்லை. இவர் எப்படி மக்களுக்கு சேவை பணியாற்றுவார் என்பது தெரியவில்லை. அதனால் நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது” என்று அவர் கூறினார்.