மத்திய அரசோட மோதுனா எப்படி.? மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கையை ஏன் மறுக்குறீங்க.? கேட்கிறார் அண்ணாமலை.!

By Asianet TamilFirst Published Sep 9, 2021, 8:58 PM IST
Highlights

மத்திய அரசுடன் மோதல் போக்கை விடுத்து உடனடியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மதுரை தோப்பூர் பகுதியில் ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிலம் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு ஜைக்கா நிதி நிறுவனத்துடன் 2021-ஆம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி ஒப்பந்தம் ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவம் படிக்க 150 புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும், கல்லூரிக் கட்டிடம் இல்லாத பட்சத்தில் வேறு இடத்தில் வகுப்புகளைத் தொடங்கலாம் என்றும், மாணவர்கள் 2 ஆண்டுகள் படித்து முடிக்கும்போது, எய்ம்ஸ் வளாகத்தில் கல்லூரி கட்டி முடிக்கப்படும், அதன்பிறகு, மாணவர்களை இடமாற்றம் செய்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியது.
தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில 150 மாணவர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு அளித்தும் அதனை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது. தற்காலிக இடங்களில் அமைக்கத் தயக்கம் இருந்தால் ஜிப்மர் மருத்துவமனையில் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் கலைக் கல்லூரிகளில் அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதிய ஜிப்மர் மருத்துவமனை மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதில் எந்த யோசனையும் ஏற்றுக்கொள்ள உகந்ததாக இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மறுத்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் மற்ற மாநிலங்களில் தற்காலிக இடங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பினைத் தொடங்கிவிட்டார்கள். கட்டிடம் முடியும்போது அவர்கள் புதிய கல்லூரியில் தங்கள் படிப்பினைத் தொடர்வார்கள். திருச்சியில் ஐஐஎம் தொடங்கியபோது, கட்டுமானத்துக்கு முன்பே புதிய மாணவர்கள் என்.ஐ.ஐ.டியில் கல்வி பயின்றார்கள். ஆகவே, மத்திய அரசின் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்நிலை எடுத்து போராடிக்கொண்டு இருந்தால், மாநிலத்தின் மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை விடுத்து உடனடியாக 150 ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பா.ஜ.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

click me!