சுயநலத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் எடப்பாடியை நான் எப்படி ஆதரிப்பது..? மு.க.ஸ்டாலின் ஆத்திரம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 17, 2020, 11:33 AM IST
Highlights

அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது. இவை இரண்டுக்கும் மத்தியில்தான் மக்களின் வாழ்க்கை ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து துறைச் செயலாளர், துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அது போதாதென்று மற்றொரு அமைச்சர் ஆகியோரின் கரோனா குறித்த பேட்டிகளுக்குப் பிறகு, அடுத்து 'கிளைமேக்ஸ்' காட்சி போல, நேற்றைய தினம், தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை ஒழித்துவிட்டதாக தனக்குத் தானே முதுகில் தட்டி முறுவலித்துக் கொள்கிறார்.

'இன்னும் இரண்டு மூன்று நாளில் கரோனாவே இருக்காது' என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார். இதற்கு இவர் காட்டிய புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, இவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றித் திசைதிருப்புகிறாரா, அல்லது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை. நேற்றைய தினம் 36 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள், இன்றைய தினம் 25 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியானால் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத்தானே அர்த்தம்” என்று கேட்கும் அவரைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

அவரே சொல்கிறார்; இதுவரை 17 ஆயிரத்து 835 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 1,383 பேரின் முடிவுகள் வரவில்லை என்கிறார். சுமார் 18 ஆயிரம் என்பது தமிழ்நாட்டு மக்கள்தொகையில் எத்தனை சதவிகிதம் என்பதை அவருக்கு அருகில் விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்ல வேண்டும்.

ஆரம்பத்திலிருந்தே உரிய கருவிகளைப் பெற்று பரிசோதனைகளை விரிவுபடுத்தி, விரைவுபடுத்துங்கள் என்று அனைவரும் திரும்பத் திரும்ப சொன்ன பிறகும், அடிப்படையான அந்த நடவடிக்கையில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டு, இப்போது திடீரென்று கரோனாவே இல்லை என்று முதல்வர் சொல்வது, 'பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிட்டதாக எண்ணுவதைப் போன்றது'. ஒருவேளை முதல்வர் தனது கையில் மந்திரக்கோல் ஏதாவது வைத்திருப்பாரோ என்று இந்த நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்!

மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில்தான் கரோனா நோய்த் தாக்கம் இருக்கிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது 22 மாவட்டங்களுக்கு அதிகமாகப் பரவிவிட்டது என்றும், மூன்றே மூன்று மாவட்டத்தில் தான் கரோனா பாதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு சொல்கிறது என்றால், இதுதான் கரோனாவை காலத்தே கட்டுப்படுத்திய செயலா? தட்டித் தட்டி எழுப்பியும் மறுத்து, மிகவும் தாமதமாக விழித்தெழுந்துவிட்டு, மருத்துவ ரீதியாக முறையான தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களைப் பெறுவதில் அலட்சியம் காட்டிவிட்டு, இப்போது கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா?

கரோனாவின் தாக்கம் ஜனவரி மாதம் இறுதியில் கேரளாவில் கண்டறியப்பட்டு, அந்த மாநிலம் பிப்ரவரி 4-ம் தேதி மாநிலப் பேரிடராக கரோனாவை அறிவித்தது. ஆனால், மாநில எல்லையை மார்ச் 16-ம் தேதி மூடியதாக அதே பேட்டியில் முதல்வர் சொல்கிறார் என்றால், 46 நாட்கள் கழித்து நடவடிக்கை எடுத்ததுதான் துரிதமான நடவடிக்கையா? கரோனாவின் தீவிரத் தன்மையை உணர்ந்த செயலா?

பிப்ரவரி மாத இறுதியிலும், மார்ச் தொடக்கத்திலும் என்ன செய்து கொண்டு இருந்தார் முதல்வர்? சட்டப்பேரவையில் நான் குரல் எழுப்பியபோது, "தமிழகத்தில் ஒருவருக்குக் கூட கரோனா வராது, வரவிடமாட்டோம்" என்று மார்தட்டினார். "70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வருந்த வேண்டாம், அவருக்கு வந்தாலும் சிகிச்சை அளிப்போம்" என்று கொடூரமான கிண்டல் அடித்துக் குதூகலம் கொண்டார். "வயதானவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மட்டும்தான் வரும்" என்றார், அனைத்தையும் ஐயம் திரிபற அறிந்த சுகாதார அமைச்சர்!

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து ரகசியமாக வைத்திருப்பதைப் போலவும், யாருக்கு வந்தாலும் அடுத்த நிமிடமே அதை வெளியிட்டுக் காப்பாற்றிவிடுவோம், என்பது மாதிரியும் அல்லவா முதல்வரும், அமைச்சரும், கிண்டலும் கேலியும் பேசினார்கள்!

ஆனால், இன்றைக்கு நிலைமை என்ன? கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் மூன்றாவது இடம் தமிழகம். விலை மதிப்பில்லாத 15 உயிர்களை இழந்திருக்கிறோம்; 1,264 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்; இதில் 30-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள்.
 அனைத்துக்கும் மேலாக சிகிச்சை கொடுத்து வந்த மருத்துவர்களில் பத்து பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். இன்னும் எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற தரவுகளே தெரியவில்லை; திரைமறைவு ரகசியமாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் உண்மை நிலையை உணர்ந்து மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையுடன், மற்றவர் உயிர்மீது நெஞ்சில் கொஞ்சம் ஈரத்துடன் செயல்படாமல், "கரோனா இன்னும் 3 நாளில் ஒழிக்கப்பட்டு ஜீரோவாக ஆகிவிடும்" என்று, “ஏதோ, சூ...மந்திரக்காளி' போல, முதல்வர் சொல்கிறார் என்றால், இவருக்கு இன்னமும் நோயின் தீவிரம் புரியவில்லையா? அல்லது அருகில் இருப்போர் சரியான தகவல்களை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவில்லையா, என்றுதான் மருத்துவ நிபுணர்கள் கேட்பார்கள்.

முதல்வரும் தமிழக அரசுக்கும் இந்த கரோனா நோயின் அடிப்படை குணத்தை உணர்த்துவதற்காகவும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் உரிய முறையில் சொல்வதற்காகவும்தான், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டச் சொல்லி மன்றாடினேன். அனைத்து காரியங்களிலும் பிரதமர் சொல்வதற்குத் தலையாட்டி அவரைப் பின்பற்றி நடக்கும் முதல்வர் ஏனோ இதை மறுத்துவிட்டார்!

எனவே, நேரில் சொல்ல வேண்டிய ஆலோசனைகளைக் கடிதமாக அவருக்கு அனுப்பினேன். அந்த ஆலோசனைகளைத் திறந்த மனதோடு முதல்வர் பரிசீலித்திருக்க வேண்டும்; சுட்டிக்காட்டிய கருத்துகளில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்; அல்லது பதில் சொல்லாமலாவது அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், "மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார், நாடகம் ஆடுகிறார், அரசியல் செய்கிறார்" என்று என்னைத் தாக்கி அறிக்கை வெளியிடுவதில் தனி இன்பம் கண்டார். கரோனா விவகாரத்தில், ஆரம்பம் தொட்டே அரசியல் பேசியது அவர்தானே!

அவர் எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நான் தடை போட நினைப்பதாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். இந்த அரசு எடுத்த எந்த நடவடிக்கைக்கும் நான் தடையாக இருந்தது இல்லை. "ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் உறுதுணையாக இருப்பேன்" என்றுதான் அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தால் தானே ஆதரிக்க முடியும்? அரைகுறை நடவடிக்கைகளை நான் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?'’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!