தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை... தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 25, 2021, 4:49 PM IST
Highlights

வாக்களிப்பதை ஊக்குவிக்க அன்றைய தினம் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது. 

வாக்குப்பதிவு தினத்தன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடரப்படும் என அறிவிக்கை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசிற்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்க வகை செய்வதற்காக அன்றைய தினம் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது.  100% வாக்கை ஊக்குவிக்க, அனைவரும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. வாக்களிப்பதை ஊக்குவிக்க அன்றைய தினம் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் இந்த உத்தரவை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 


இந்நிலையில் தனியார் நிறுவனங்கள், ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில், ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதில்லை எனக் கூறி சேலத்தைச் சேர்ந்த அஹமது ஷாஜகான் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. 

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் உரிமை குறித்து விளம்பரப்படுத்தும் வகையில் அறிவிக்கை வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.  மேலும், இது தொடர்பான  சட்டவிதிகளை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிக்கையில் எச்சரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

tags
click me!