எகிறும் விலைவாசி.. ஜெயலலிதா பாணியை கையில் எடுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ்ஸின் அட்வைஸ்..!

By Asianet TamilFirst Published Jun 3, 2021, 9:11 PM IST
Highlights

விலைவாசி உயர்வதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் கடத்தலையும், பதுக்கலையும் தடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோயின் தாக்கம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மறுபுறம் விலைவாசி உயர்வு அதைவிட மோசமான தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பின் கொடூரத் தாக்கத்தையடுத்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, பொதுமக்கள் வேலைவாய்ப்பினையும் வருமானத்தினையும் இழந்து, அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிற இந்தச் சூழ்நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு பொதுமக்களை விழிபிதுங்க வைத்துள்ளது.
குறிப்பாக, மக்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலை உச்சத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா தாக்கம் என்பது சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து இருந்து வந்தாலும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் இந்த மாதம் உச்சத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சமையல் எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 20 விழுக்காடும், சூரியகாந்தி எண்ணெயின் வலை 56 விழுக்காடும், கடும் எண்ணெய் விலை 42 விழுக்காடும், வனஸ்பதியின் விலை 42 விழுக்காடும், பாமாயில் விலை 52 விழுக்காடும், பருப்பு வகைகளின் விலை 15 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று அரிசி, சர்க்கரை, உப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்து உள்ளன. 
இதன் காரணமாக, பொதுமக்களின் மாத பட்ஜெட்டில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விலைவாசி உயர்வுக்கு பல்வேறு பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும் இந்தச் சூழ்நிலையில் விலைவாசி உயர்வு ஏற்படுவதற்கு காரணம் அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்டுவதும், பதுக்கப்படுவதும்தான். ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, வெளிச் சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில், விலைநிறுத்தல் நிதி, அதாவது price stabilisation fund என்ற ஒன்றினை ஏற்படுத்தி, அதற்கு 100 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி, சன்னரக அரிசி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், மிக சன்னரக அரிசி ஒரு கிலோ 31 ரூபாய்க்கும் விற்க நடவடிக்கை எடுத்ததோடு, அத்தியாவசியப் பொருள்களின் விலையினை வெகுவாக குறைத்தார். 

எனவே, விலைவாசி உயர்வதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் கடத்தலையும், பதுக்கலையும் தடுக்கவும், சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் நியாயமான விலையில் வெளிச் சந்தையில் அத்தியாவசியப் பொருள்களை பெறவும், தேவைப்பட்டால், விலைநிறுத்தல் நிதியத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

click me!