ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு வசூல் மையமா..?? டோல்கேட் கொள்ளை குறித்து நீதிபதிகள் காட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 5, 2019, 4:21 PM IST
Highlights

3 டோல்கேட் மையங்களில் இந்த வாகனங்களிடம் இருந்து ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்கு புறம்பானது. எனவே 27 கிலோ மீட்டர் தூரத்தில் 3 சுங்க கட்டண மையம் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். 

மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பிர்களா.?  என உயர் நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையில் 27 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 3 டோல்கேட்டுகள் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும்  ஜனவரி 11 தேதிக்குள் தமிழக அரசு விரிவான பதிலளிக்கவேண்டும என கூறி அடுத்த  விசாரணையை ஜனவரி 11 தேதிக்கு ஒத்திவைத்தது  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை கே.கே.நகரை சேர்ந்த இம்மானுவேல், உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்,
 அதில், "மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.  இந்த சாலையில் தற்போது மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய 3 இடங்களில் டோல்கேட் மையம் அமைக்கப்பட்டு,  செயல்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என 3 டோல்கேட் மையங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

தற்போது சென்னையில் இருந்து விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம்பட்டி, மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி (விமானநிலையம் அருகில்), கப்பலூர் என 5 டோல்கேட் மையங்களில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.டோல்கேட்டுகளில் வாகனங்கள் தேங்கி நிற்பதால் அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சிரமப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி, 4 வழிச்சாலையில் 60 கிலோ மீட்டர் தூரத்தில் தான் டோல்கேட் மையம் அமைக்க வேண்டும். மேலும் அதில் செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 0.65 பைசா தான் வசூலிக்க வேண்டும். 

ஆனால் மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியில் இருந்து விமானநிலையம் அருகில் உள்ள பரம்புப்பட்டி (விமானநிலையம் அருகில்) வரை 27 கிலோ மீட்டருக்குள் 3 டோல்கேட் மையங்களில் இந்த வாகனங்களிடம் இருந்து ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்கு புறம்பானது. எனவே 27 கிலோ மீட்டர் தூரத்தில் 3 சுங்க கட்டண மையம் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.  3  சுங்க கட்டண மையங்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசுவாமி ,ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது மனு தார்ர் தரப்பில் முற்றிலும் விதிமுறைகள் மீறி 27 கிமி தொழைவிற்க்கு முன்று சுங்கசாவடி அமைத்து வசூலில் ஈடுபடுகின்றனர் என்றனர்.இதை தொடர்ந்து நீதிபதிகள் மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பிர்களா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து தமிழக அரசு ஜனவரி 11 தேதி விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 11 தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

click me!