சென்னையில் 33 வார்டுகளில் மட்டும் தீவிரம்காட்டும் கொரோனா..!! நம்பிக்கையூட்டிய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

By Ezhilarasan BabuFirst Published May 20, 2020, 4:12 PM IST
Highlights

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 167 வார்டுகளில் 10க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே  வைரஸ் தொற்று பாதிப்பு  உள்ளது .
 

கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு மற்றும் சமூகப் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதது என  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .  ராயபுரம் மண்டலத்தில் நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டத்தை இன்று துவக்கி  வைத்த அவர் இவ்வாறு கூறினார் .   சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் ,  அதன் அடிப்படையில் ஏற்கனவே சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  பகுதி வாரி திட்டமிடப்பட்டு வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .  தற்பொழுது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்களை கொண்டு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டத்தை  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் அவர்கள் இன்று இராயபுரம் மண்டலம் வாட் 56 , பி.ஆர்.என் தோட்டப் பகுதியில் துவக்கிவைத்தார் .  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நுண் அளவில் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வைரஸ் தொற்று பாதித்த ,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவத்துறை பரிந்துரைத்துள்ள கபசுர குடிநீர் இந்திய மருத்துவ துறை அறிவுறுத்தலின்படி ஊட்டச்சத்து மாத்திரைகள் நாள்தோறும் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகின்றன .  இதுவரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 5 லட்சத்து 20 ஆயிரம் கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன .  கொரோனா வைரஸ் தொற்று தடுக்க முகக் கவசம் அணிதல் அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவை சிறந்த வழிமுறைகள். எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ள படி குடிசைவாழ் பகுதிகளில் உள்ள 26 லட்சம் மக்களுக்கு மாநகராட்சியின் சார்பில்   ஒருவருக்கு மூன்று என விலையில்லாமல் மறுபயன்பாட்டுடன் கூடிய முகக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன .  கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் சமுதாய பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதது .  எனவே கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மக்களுக்கு பல்வேறு வகையில்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கையாக வைரஸ் பாதித்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நம்ம சென்னை கொரோனா நோய் தடுப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது .  இத்திட்டத்தில் 500 சுகாதார ஆய்வாளர்கள் வைரஸ் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர் .  இதில் முதல்கட்டமாக 165 சுகாதார ஆய்வாளர்கள் ராயபுரம் மண்டலத்தில் பணிகளை துவக்கி உள்ளனர் .  இவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொதுமக்களுக்கு சளி இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்து வைரஸ் தொற்று இருப்பின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்வார்கள் .  மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்வார்கள் முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பகுதிகளுக்குச் சென்று நுரையீரல் சம்பந்தமான பரிசோதனை மேற்கொள்ள 14 நடமாடும் x-ray வாகனங்களை துவக்கி வைத்துள்ளார் .  இந்த நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களைக் கொண்டு எவ்வித அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்களின் இடத்திற்கே சென்று எடுக்கப்படும் ,  சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 167 வார்டுகளில் 10க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே  வைரஸ் தொற்று பாதிப்பு  உள்ளது . 

மீதமுள்ள 33 வார்டுகளில் மட்டுமே பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது எனவே இந்த பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறையின் சார்பில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அதன்  அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .  தமிழகத்தில் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 26 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் குறிப்பாக சென்னையில் மட்டும் சுமார் 85 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .  முன்னதாக கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவும் நவீன ரோபோ ஆட்டோவை அமைச்சர் துவக்கி வைத்தார் . 
 

click me!