மகளின் திருமணத்திற்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல்... உயர்நீதிமன்றம் உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Jul 5, 2019, 2:57 PM IST
Highlights

மகளின் திருமணத்துக்காக ஒருமாத காலம் நளினிக்கு உயர்நீதிமன்றம் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. 

மகளின் திருமணத்துக்காக ஒருமாத காலம் நளினிக்கு உயர்நீதிமன்றம் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பரோல் கேட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘என்னுடைய மகள் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். எனவே, எனக்கு 6 மாதம் ‘பரோல்’ வேண்டும் என்று சிறைத்துறை தலைவர், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை என் மனுவை பரிசீலிக்கவில்லை. கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகிவாதிட எனக்கு அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, நளினியை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்க வில்லை. நளினிக்கு நேரில் ஆஜராகிவாதிட உரிமை உள்ளது என்று கருத்து கூறினர். பின்னர், நளினி சிறையில் இருந்தபடி இந்த வழக்கில் காணொலி காட்சி மூலம் வாதிட விருப்பமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு கடந்த 24-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘நளினி காணொலி காட்சி மூலம் வாதம் செய்ய விருப்பம் இல்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிடவே விருப்பம் என்றும் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளார்’ என்று கூறினார்.

இந்நிலையில் இன்று 5-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்தினர். அதன்படி ஆஜராகி நளினி வாதாடினார். அப்போது, தனது மகளை பிரிந்து வாழ்கிறேன். அதை விட பெரிய தண்டனை இல்லை. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனது மகள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். அதற்காக 6 மாத காலம் பரோலில் விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். ஆனால் ஒரு மாதகாலம் மட்டுமே பரோலில் விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு  பாதுகாப்புக்கான செலவை காவல்துறையினர் நளினியிடம் கேட்கக்கூடாது. நளினி எந்த அரசியல்வாதிகளையும், ஊடகத்தினரையும் சந்தித்து பேசக்கூடாது’ என உத்தரவிட்டனர். 
 

click me!