அப்போ இறங்கிட வேண்டியதுதான்... அடேங்கப்பா இத்தனை இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்களா விஜய் ரசிகர்கள்..?

By Thiraviaraj RMFirst Published Oct 13, 2021, 11:07 AM IST
Highlights

பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில், அரசியலில் முழுசாக ஈடுபடாமல் உள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது 

திமுக அணிக்கு 1008 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் அதிமுக 198 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது ரத்தத்தின் ரத்தங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. 140 மாவட்ட கவுன்சிலர், 1,381 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது வரை 98% நிறைவு பெற்றுள்ளது. முழு விவரம் பகல் 2 மணிக்கு வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கட்சிகள் சின்னத்தில் போட்டியிட்ட 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 137 இடங்களின் நிலவரம் தெரிய வந்திருக்கிறது. இதில் திமுக கூட்டணி 133 இடங்களில் முன்னணி அல்லது வெற்றி பெற்றிருக்கிறது. பாமக ஓரிடத்திலும் அதிமுக கூட்டணி வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 1381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் 1208 பதவிகளுக்கான நிலவரங்கள் தெரிய வந்திருக்கிறது. இதன்படி திமுக கூட்டணி 891 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலையில் பெற்றிருக்கின்றன. 

அதிமுக கூட்டணி 181 இடங்களில் மட்டுமே முன்னிலை அல்லது வெற்றி பெற்றிருக்கிறது. பாமக 33, அமமுக 5, தேமுதிக 1, மற்றவர்கள் 97 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில்  சுயேட்சையாக போட்டியிட்டனர்.

இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான வெற்றியை பெற்றுள்ளனர்.   நேற்று மாலை வரை வார்டு உறுப்பினர்கள் 36 பேர் வெற்றி பெற்றிருந்தனர். 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மொத்தமாக 49 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.

தற்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 9 மாவட்டங்களில்  இதுவரை 109 பேர் வார்டு உறுப்பினர்களாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில், அரசியலில் முழுசாக ஈடுபடாமல் உள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

click me!