நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையின் பெயரை தப்பா சொல்லிட்டேன்... ஹெச். ராஜா பல்டி..!

By Asianet TamilFirst Published May 27, 2021, 8:50 AM IST
Highlights

ஜவாஹிருல்லா மீதான புகாரில், நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையின் பெயரை தவறுதலாக கூறிவிட்டதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 
 

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அண்மையில் பேட்டியளித்தபோது, “ஜெயிலர் ஜெயப்பிரகாஷைக் கொன்ற அல்-உம்மாவோட ஆளு இன்னைக்கு பாபநாசத்தோட எம்எல்ஏ. அந்த ஜெயப்பிரகாஷ் நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா” என்று கூறியிருந்தார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மீதான இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக மனித நேயமக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


அந்தப் புகாரில், “நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயிலர் தாஸ் மாரடைப்பு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். ஆனால், வேண்டுமென்றே ஹெச்.ராஜா சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் பெயரை கெடுக்கும் நோக்கில் பொய்யான கருத்துகளை பரப்பி வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் தலையிட்டு ஹெச். ராஜா மீது புகார் அளிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி என்று தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் ஹெச்.ராஜாவை மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் காரைக்குடியில் ஹெச்.ராஜா அளித்த பேட்டியில், “முந்தைய பேட்டியில் நான் பேசியதில் ஒரே ஒரு தவறு. அது என்னவென்றால், நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையில் இருந்தவர். அதனால் தவறுதலாக அவர் பெயரை கூறிவிட்டேன். அது என் தவறுதான். அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது. மற்றபடி நான் பேசியவை அனைத்தும் உண்மையே” என்று விளக்கம் அளித்துள்ளார். 
 

click me!