பச்சை துண்டு, பச்சை மாஸ்க், போர்க்களம் பூண்ட ஸ்டாலின்... திமுக கூட்டணி கட்சியினர் தடையை மீறி உண்ணாவிரதம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 18, 2020, 12:06 PM IST
Highlights

சட்டத்தையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராடுவதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். ஆனால் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு தயக்கம்காட்டி வருகிறது.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையிலும் தடைமீறி இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு சட்டத்தை திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் முடிவுறாது எனவும் அவர்கள் தீர்க்கமாக இருந்து வருகின்றனர்.

சட்டங்களில் திருத்தம் கொண்டு வர தயார் எனவும், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் எனவும் மத்திய அரசு கூறி வருகிறது. இதற்காக பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற நிலையிலும் பலனில்லை. வேளான் சட்டத்தில் திருத்தம் வேண்டி தாங்கள் போராடவில்லை எனவும், அந்த சட்டத்தையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராடுவதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். ஆனால் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு தயக்கம்காட்டி வருகிறது. இதனால் விவசாயிகள் டெல்லியின் கடும் குளிரிலும், உறக்கமின்றி, சரியான உணவின்றி தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். 

விவசாயிகளின் அறவழி போராட்டத்திற்கும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதி வழியில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், பாராளுமன்ற சட்டமன்ற  உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறுமென திமுக கூட்டணி கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். 

ஏற்கனவே சென்னையில் கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்கமுடியாது என காவல் துறை மறுத்துவிட்டது. ஆனால் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் உயிரையே துச்சமென நினைத்து டெல்லியில் போராடிவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பச்சைநிற மாஸ்க் அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

 

click me!