நடைபாதையில் பளபளக்கும் கிரானைட் கற்கள்.. வழுக்கி விழுந்தால் உயிரே போகும்.. அலறும் ஓ.பன்னீர் செல்வம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2021, 1:21 PM IST
Highlights

மேலும் ஏற்கனவே நல்ல நிலையில் இருந்த கருங்கற்கள் மற்றும் சிமெண்ட் கற்களாலான நடைபாதைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் வீசப்படுவதாகவும், இதன் காரணமாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிப்பதால் வயதானோர், கர்ப்பிணி பெண்கள் அதில் வழுக்கி விடும் ஆபத்துக்கள் உள்ளதால் அதை உடனே முதலமைச்சர் தலையிட்டு தடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்ருமாறு:- 

சாலைகளின் இரு மருங்கிலும் இடத்திற்கு தகுந்தார் போல் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பதும், அந்த நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும் அவ்வாறு அமைக்கப்படும் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும் மாநில அரசின் கடமை ஆகும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் பயண நேரம் மற்றும் வாகன இயக்கம் செலவினை குறைக்கும் வண்ணமும் புதிய பாலங்கள், சாலைகள் அமைத்தல், புறவழிச் சாலைகள் அமைத்தல் உட்பட பல்வேறு சாலை பணிகளை செய்யும் அரசு நடைபாதை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றாலும், அதில் பாதசாரிகளுக்கு சில சிரமங்கள் இருப்பதாக தெரிய வருகிறது. 

சென்னையில் ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள நடைபாதைகளில் இருந்த கருங்கற்கள், சிமெண்ட் கற்கள், பெயர்த்து எடுக்கப்பட்டு குப்பையில் வீசப்படுவதாகவும், பதிலாக புதிய கிரானைட் கற்கள் பொருத்தப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஏற்கனவே இருந்த கருங்கற்கள் மற்றும் சிமெண்ட் கற்களினால் ஆன நடைபாதைகள் சிறுவர்கள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைத்து தரப்பினரும் நடப்பதற்கு ஏதுவாக இருந்ததாகவும்,

இதுபோன்ற நடைபாதைகள் மழைக்காலங்களிலும், அல்லது தண்ணீர் இருக்கும் இடங்களிலும் சறுக்காமல் பிடிமானத்துடன் இருப்பதாகவும், ஆனால் தற்போது பல பலக்கும் கிரானைட் கற்களால் அமைக்கப்படும் நடைபாதைகள், சறுக்கும் தன்மையுடையதாக உள்ளதாகவும், இதன் காரணமாக மூத்த குடிமக்கள், சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் நிலை தடுமாறும் சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதற்கு பயந்து பெரும்பாலான பாதசாரிகள் நடைபாதைகளில் நடக்காமல், சாலையின் ஓரமாக நடப்பதாகவும், கிரானைட் கற்கள் பதித்த நடைபாதை ஆபத்தானதாக உள்ளதாகவும் பாதசாரிகள் தெரிவிப்பதாக தகவல்கள் வருகின்றன. 

மேலும் ஏற்கனவே நல்ல நிலையில் இருந்த கருங்கற்கள் மற்றும் சிமெண்ட் கற்களாலான நடைபாதைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் வீசப்படுவதாகவும், இதன் காரணமாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் இது போன்ற நடவடிக்கை அரசு பணம் வீண், பொது மக்களுக்கு அச்சம் என்ற இரட்டிப்பு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்காக திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்ற  கோட்பாட்டிற்கு ஏற்ப மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடிய மக்களின் வரிப்பணம் வீணாகக்கூடிய, விபத்துகளையும் அதன் மூலம் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அரசின் கடமை என பொதுமக்கள் கருதுகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி இதன் உண்மை நிலையை கண்டறிந்து பாதசாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அரசு பணம் வீணாக்கப்படுவதை தடுக்கவும், பாதசாரிகளின் நலன்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
 

click me!