லட்சக்கணக்கிலா ஆசிரியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் ? அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட சம்பளப் பட்டியல் !!

By Selvanayagam PFirst Published Jan 27, 2019, 7:00 AM IST
Highlights

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள், இவர்கள் ஏன் போராட்டம் செய்கிறார்கள் என பொது மக்களிடையே ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்குகிறார்களா ? அமைச்சர் ஜெயகுமார் தற்போது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனர் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களை அமைச்சுப் பணியாளர், தலைமைச்செயலக பணியாளர், ஆசிரியர்கள், பகுதி நேர பணியாளர்கள் என தனித்தனியே ஊதிய நிலை அடிப்படையில் வகைப்படுத்தி சம்பளப் பட்டியலை அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ளார்.

அமைச்சுப் பணியாளர்களைப் பொறுத்தவரை குறைந்தபட்சமாக அலுவலக உதவியாளர் பணிக்கு சேர்ந்ததும் மாதத்துக்கு 18 ஆயிரத்து 840 ரூபாயும், சராசரியாக 28 ஆயிரத்து 560 ரூபாயும் சம்பளம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுவே, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளருக்கு மாதத்துக்கு 24 ஆயிரம் ரூபாயும், சராசரியாக 36 ஆயிரத்து 360 ரூபாயும் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்ததும் மாதம் 24 ஆயிரத்து 720 ரூபாயும் சராசரியாக 35 ஆயிரத்து 400 ரூபாயும் வழங்கப்படுவதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி நேரப் பணியாளர்களான சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள் பணியில் சேர்ந்ததும் 10 ஆயிரத்து 53 ரூபாயும், சராசரியாக 14 ஆயிரத்து 495 ரூபாயும் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச ஊதியத்தைப் பொறுத்தவரை அமைச்சுப் பணியாளராக உள்ள கண்காணிப்பாளருக்கு பணிக்கு சேர்ந்ததும் மாதம் 44 ஆயிரத்து 280 ரூபாயும், சராசரியாக 66 ஆயிரத்து 840 ரூபாயும் வழங்கப்படுகிறது.

தலைமைச் செயலக இணைச்செயலாளருக்கு, பணிக்கு சேர்ந்ததும் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 80 ரூபாயும் சராசரியாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 920 ரூபாயும் வழங்கப்படுகிறது.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிக்கு சேர்ந்ததும் 68 ஆயிரத்து 280 ரூபாயும், சராசரியாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 320 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இதேபோல், அரசு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தபோதும், கேட்காமலேயே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்ததாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அத்துடன் 2018-2019 ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத் திட்ட விவரமும் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசின் மொத்த வரி வருவாய் மற்றும் மத்திய அரசின் திட்ட நிதியாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 950 கோடி ரூபாய் வருகிறது.

அதில் சம்பளத்துக்கான செலவு மட்டும் 52 ஆயிரத்து 171 கோடி ரூபாய் ஆகும். ஓய்வூதிய செலவாக 25 ஆயிரத்து 362 கோடி ரூபாயும், நிர்வாக செலவாக 10 ஆயிரத்து 837 கோடி ரூபாயும் ஆவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருடத்துக்கு அரசு செலுத்தும் வட்டி தொகையாக 28 ஆயிரத்து 729 கோடி ரூபாயும், மக்கள் நலத்திட்டங்களுக்காக 47 ஆயிரத்து 851 கோடி ரூபாயும் ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!