கள்ள மௌனம் சாதித்திடும் ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கு மிகப்பெரும் சனநாயகப்படுகொலை: சீமான் ஆவேசம்.

Published : Oct 22, 2020, 04:57 PM IST
கள்ள மௌனம் சாதித்திடும் ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கு மிகப்பெரும் சனநாயகப்படுகொலை: சீமான் ஆவேசம்.

சுருக்கம்

எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இடங்களை எடுத்து, முற்பட்ட பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி மிகப்பெரும் சமூக அநீதியை நிகழ்த்தியிருக்கிறது. 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காது காலந்தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு அமைச்சரவையின் முடிவை மக்களால் தேர்வுசெய்யப்படாது நியமனப்பதவி மூலம் அதிகாரம் பெற்றிருக்கும் ஆளுநர் தடுத்து முடக்குவது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே தகர்க்கும் கொடுஞ்செயலாகும்.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலத் தகுதி பெறுவது முற்றாக அற்றுப்போய்விட்டது மட்டுமின்றி, ஒவ்வொராண்டும் நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிற மாணவச்செல்வங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக மக்கள் அளித்த உணர்வு நெருக்கடியின் விளைவாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டும் அதனை அங்கீகரிக்காது கள்ள மௌனம் சாதித்திடும் ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கு மிகப்பெரும் சனநாயகப்படுகொலையாகும்.  

ஏற்கனவே, ஏழு தமிழர் விடுதலை குறித்தான மாநில அரசின் முடிவிற்கு மாறாக, மௌனம் காத்து விடுதலைக்கோப்பில் கையெழுத்திட மறுத்து வரும் ஆளுநர், தற்போது மருத்துவ மாணவர் இடஒதுக்கீட்டிலும் காலதாமதம் செய்வதென்பது தமிழக மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப் பார்ப்பதாக உள்ளது. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தமிழக முதல்வரும், 20ஆம் தேதி 5 தமிழக அமைச்சர்களும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகும்கூட, அதனைத் துளியும் மதியாது அலட்சியப்போக்குடன் காலம் தாழ்த்துவது எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தையே அவமதிக்கின்ற படுபாதகச்செயலாகும். இது மாநிலத்தன்னாட்சி மீதும், தமிழகத்தின் இறையாண்மையின் மீதும் மத்திய அரசு தொடுக்கும் மறைமுகப்போராகும். சமூக நீதியின் அரணாக விளங்கும் இட ஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் எனும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதற்காகவே முற்பட்ட வகுப்பினருக்கு 10  விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. 

மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இவ்வாண்டு இடங்களை ஒதுக்க மறுத்த மத்திய அரசு, வங்கிப் பணியாளர் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்டோர் , எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இடங்களை எடுத்து, முற்பட்ட பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி மிகப்பெரும் சமூக அநீதியை நிகழ்த்தியிருக்கிறது. இதுமட்டுமல்லாது, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் போதிய மாணவர் சேர்க்கை இல்லை எனக் கூறி, நிரப்பபடாத அந்த இடங்களை முற்பட்ட பிரிவினரைக் கொண்டு நிரப்பி, சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையை வீரியமாகச் செய்து வருகிறது. அதன் நீட்சியாகவே, தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மூலம் மத்திய அரசு தடையை ஏற்படுத்தியிருக்கிறது. 

நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து மற்ற மாநிலங்களில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் மருத்துவக் கலந்தாய்வே நடைபெறாதது தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் மனஉளைச்சலையும், பெருங்குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநரை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி