இன்று காலை பொங்கல் கொண்டாடுவதற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தயாராக இருந்தார்.
சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செயல் நெகிழ வைத்துள்ளது.
தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வருபவர் தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜன். இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் மகளான தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவரது கணவர் சௌந்தரராஜன் ஆகிய 2 பேருமே தொழில் முறை மருத்துவர்கள் ஆவார்கள்.இவர்களது வீடு சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை குடும்பத்தார், உற்றார் உறவினருடன் கொண்டாடி மகிழ்வதற்காக தமிழிசை சவுந்தர்ராஜன் சென்னை வீட்டுக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் இன்று காலை பொங்கல் கொண்டாடுவதற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தயாராக இருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூதாட்டி ஒருவர் ஆளுநர் வீட்டின் முன்பாக திடீரென மயங்கி விழுந்து காயம் அடைந்தார். இதை கண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக மருத்துவராக மாறி அந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இதன் பின்னர் காயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ள வடபழனி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார். மேலும், வடபழனி தனியார் மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மூதாட்டிக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வீட்டின் முன்பு பைக்கில் சென்ற மூதாட்டி மயக்கமடைந்து சாலையில் விழுந்தார் .
பொங்கல் கொண்டாடுவதற்கு தயாராக இருந்த ஆளுநர் உடனடியாக ஆம்புலன்சை அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினார். ❤️🙏 pic.twitter.com/xNaiVqnqgb
இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். ஆளுநர் வீட்டின் முன்பாக, இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.