
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலாளர் சசிகலா சிறை சென்றுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் சசிகலா அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை எடப்பாடி பழனிச்சாமி கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, தனக்கு உள்ள எம்எல்ஏக்களின் பட்டியலையும் வழங்கினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் நேற்று வரை அழைக்கவில்லை.
பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையின் காரணமாக ஆளுங்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால்தான் புதிய ஆட்சி அமைப்பதில் கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார் என கூறப்படுகிறது.
இதேபோ, பன்னீர்செல்வத்துக்கு 10 எம்எல்ஏக்கள் நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். கோல்டன் பே ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களில் பலர் தனக்கு ஆதரவு அளிக்க உள்ளனர், எனவே எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கூடாது என பன்னீர்செல்வம் சார்பில் நேற்று மனோஜ்பாண்டியன் மற்றும் மைத்ரேயன் ஆகியோர் கவர்னரிடம் வலியுறுத்தினர்.
இதைதொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு மீண்டும் கவர்னர் மாளிகை சென்றார். அப்போது, தங்களுக்கு ஆட்சி அமைக்கும் முழு தகுதி உள்ளது, ஏற்கனவே ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை அளித்துவிட்டோம்.
எனவே தாமதிக்காமல் விரைவில் ஆட்சி அமைக்க எங்களை அழைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 10 நிமிட சந்திப்புக்குப் பின் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு கவர்னரை சந்திக்க வரும்படி, ராஜ்பவனில் இருந்து, அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சி அமைப்பது குறித்து, கூறவில்லை.
இதைதொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சில அமைச்சர்கள், கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டுவிட்டனர்.