
பருவமழையால் ஏற்படக்கூடிய எந்தவிதமான இடர்பாடுகளையும் சந்திக்க அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பல்லவன் இல்லம் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கடந்த பேரிடர்களின் போது ஏற்பட்ட அனுபவத்தால் இந்தமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால்தான் விடிய விடிய கனமழை பெய்தும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என தெரிவித்தார்.
15 மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை 30 அமைச்சர்கள் ஆய்வு செய்வதாகவும் கனமழையால் ஏற்படக்கூடிய எந்த இடர்பாடுகளையும் சந்திக்க அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மழைநீர் தேக்கம் என்பது வேறு, வெள்ளம் என்பது வேறு என்றும் தற்போது கனமழை காரணமாக நீர் தேங்கியுள்ளதே தவிர இது வெள்ளம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.